கல்லாடதேவ நாயனார் அருளிச் செய்த 19. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் அகவற்பா திருச்சிற்றம்பலம் 499. | பரிவின் தன்மை உருவுகொண் டனையவன், போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன், குருதி புலராச் சுரிகை எஃகம் அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன், | 5 | தோல்நெடும்பையில் குறுமயிர் திணித்து
வாரில் வீக்கிய வரிகைக் கட்டியன், உழுவைக் கூருகிர்க் கேழல்வெண் மருப்பு மாறுபடத் தொடுத்த மாலையுத் தரியன், நீலப்பீலி நெற்றி சூழ்ந்த | 10 | கானக் குஞ்சிக் கவடி புல்லினன், |
499. 'திருமறம்' என்பது பற்றி முன்னைப் பாட்டின் உரையில் கூறப்பட்டது. அடி-1: பரிவு - அன்பு. பரிவின் தன்மை - பரிவாகிய பண்பு. இன், வேண்டாவழிச் சாரியை, இவ்அடியையே பற்றிச் சேக்கிழார் "அன்பு பிழம்பாய்த் திரிவார்" எனவும், "அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு" எனவும் அருளினமை காண்க. அடி-2: போழ் வார் போத்த - தோலை வாரால் தைத்த. 'போழ்' என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளைக் குறித்தது. போழ்தல் - உரித்தல். தாழ் அகச் செருப்பு - தாழ்ந்த உள்ளிடத்தை யுடைய செருப்பு. அடி-3: சுரிகை எஃகம் - குற்றுடைவாளாகிய படைக்கலம். எஃகம் - கூர்மை. அதுவும் ஆகுபெயராய், அதனையுடைய படைக்கலத்தைக் குறித்தது. 'எஃகத்தோடு கட்டிய' என உருபு விரித்துரைக்க. அடி-4: 'உடையாகிய தோலின்மேல் கச்சையை உடையன்' என்க. 'உடைத் தோல்' என்பதில் தகர ஒற்றுத் தொகுத்தலாயிற்று. அடி-6: 'வீக்கிய வாரின் வரி' என மாற்றிக் கொள்க. வீக்கிய - கட்டி முடிந்த. வாரின் வரி - வாரால் திரிக்கப்பட்ட கயிறு. கட்டியன் - கட்டினவன்; கட்டியிருப்பவன்.
|