பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை6

காரைக்கால் அம்மையார்
அருளிச் செய்த

2. மூத்த திருப்பதிகம் - 1

(இத்திருமொழிகளின் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க)

திருவாலங்காடு - பண்நட்டபாடை
திருச்சிற்றம்பலம்

 

2.கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து

குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு

பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்

தங்கி யலறி யுலறு காட்டில்

தாழ்சடை எட்டுத் திசையும் வீசி

அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்

அப்ப னிடந்திரு ஆலங் காடே.

1


2. ‘திருப்பதிகம்’ என்பது தேவாரப் பதிகங்களுக்கு உரிய பெயராயினமையால், அவற்றிற்கு முன்னே தோன்றிய அம்மை பதிகங்கள், ‘மூத்த திருப்பதிகம்’ எனப்பட்டன. திருவாசகத்தில் ‘கோயில் மூத்த திருப்பதிகம்’ என்பது கோயிலின் மற்றைப் பதிகங்கட்கு முன்னர்த் தோன்றியது. அம்மை பேய் வடிவம் பெற்றதற்கு ஏற்பப் பேய்களது வருணனைகளையும், ‘ஆலங்காடு’ என்பதற்கு ஏற்பக் காட்டு வருணனைகளையும் இப்பதிகங்களிற் காணலாம். அம்மை, “நான் மகிழ்ந்து பாடி - அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க”1 என வேண்டிப் பெற்ற வரத்தின்படி இறைவனது ஆடலை வருகின்ற பதிகத்திற் பாடுவார். ஞானசம்பந்தரது முதற் பதிகம் நட்ட பாடைப் பண்ணில் அமைந்தது போலவே அம்மைதன் மூத்த முதற் பதிகமும் நட்டபாடைப் பண்ணில் அமைந்துள்ளது.

அ. சொ. பொ.: திரங்கி - வற்றி. குண்டு - ஆழம். குழி வயிறு - ஒட்டிய வயிறு. பங்கி - தலை மயிர். பரடு புறங்கால். உலறுதல் - பசியால் உடல் மெலிதல். சில வேளைகளில் மற்றைப் பேய்கள்


1. காரைக்காலம்மையார் புராணம் - 60.