பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை754

1028.வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள்
நாத னவனெச்சன் நற்றலை யும்,தக்க னார்தலையுங்
காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழ்ந்துநின்று
மாதவ ரென்னோ மறைமொழி யாலே வழுத்துவதே.

7

1029.வழுத்திய சீர்த்திரு மாலுல குண்டு,வன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றான்உட்கப் பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கையிட,
அழுத்திய கல்லொத் தன்ஆய னாகிய மாயவனே.

8

1030.மாயவன், முந்நீர்த் துயின்றவன், அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல், நல்ல புலத்தினர்நெஞ்(சு)

1028. குறிப்புரை: வேத முதல்வன், பிரமன். எச்சன் - யாக தெய்வம். காதிய - அழித்த. "வேள்வி வேத ஒழுக்கம். ஆயினும் வேள்வியில் வேத முதல்வன் தலையையும், வேள்வித் தேவன் தலையையும், வேட்டோன் தலையையும் அறுத்த சிவபெருமானை அந்தணர்கள் வேத மந்திரங்களைச் சொல்லித் துதித்தல் ஏன்" என வியப்புத் தோன்றக் கூறிக் குறிப்பால், 'உண்மை வேத ஒழுக்கம் இன்னது' என்பதைத் தோன்ற வைத்தமையின், இது விபாவணையணி. உண்மை வேத ஒழுக்கமாவது சிவபிரானைப் போற்றுதலன்றி இகழ்தலன்று என்பதாம். நாதன் - தலைவன். அவன், பகுதிப் பொருள் விகுதி.

1029. குறிப்புரை: ("உண்ட களைப்புத் தொண்டருக்கும் உண்டு - என்னும் முறையில்) 'திருமால் உலகை உண்டபின் ஆதிசேடனாகிய பாம்பின் கழுத்தில் படுத்துச் சிறிதே உறங்கினான். அப்பொழுது அப்பாம்பினைத் திருச்சிற்றம் பலத்து இறைவன் தனது கையில் கங்கணமாக இட, அக் கங்கணத்தில் அழுத்திய நீலமணிபோல அவன் விளங்கினான்' என்பதாம். உட்கு - அஞ்சத் தக்க. 'துயின்றானுக்கு' என்பது பாடமன்று. பாந்தள் - பாம்பு. 'திருக்கையில் இட' என்க. 'அம் மாயவன்' எனச் சுட்டு வருவிக்க. வழுத்திய சீர் - பலராலும் துதிக்கப்படும் புகழையுடைய. 'செழுந்திரள்' என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது. இடத்துக்குரிய, 'செழுந்திரள் நீர்' என்னும் அடை ஒற்றுமை பற்றி இடத்தின்கண் உள்ள பொருட்குக் கூறப்பட்டது.

1030. குறிப்புரை: "நல்ல புலத்தினர் நெஞ்சு ஏய் அவன் ... ஆடும் கழல்" என்பதை முதலிற் கூட்டியுரைக்க. புலம் - அறிவு; ஞானம். ஏய்தல் - பொருந்துதல். தாயவன் - தாயாகியவன். மறைத்தல் - தீங்கைத் தடுத்துக் காத்தல். "நிழல்" என்றதனால், தடுக்கப்படுவது