ஏனாதிநாத நாயனார் 1102. | பத்தனை யேனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள் அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும் நித்தனை யீழக் குலதீப னென்பரிந் நீள்நிலத்தே. | | 10 |
கண்ணப்ப நாயனார் 1103. | நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல் நலத்தில் பொழிதரு கண்ணில் குருதிகண் டுள்நடுங்கி வலத்திற் கடுங்கணை யால்தன் மலர்க்கண் ணிடந்தப்பினான் குலத்திற் கிராதன்நங் கண்ணப்ப னாமென்று கூறுவரே. | | 11 |
குங்குலியக்கலய நாயனார் 1104. | ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள் சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர் காதலி தாலிகொடுத் தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன் காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரிற் கலயனையே. | | 12 |
மானக்கஞ்சாற நாயனார் 1105. | கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும் அலசு மெனக்கரு தாதவள் கூந்தல் அரிந்தளித்தான் மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாற னெனும்வள்ளலே. | | 13 |
1102. குறிப்புரை: எயினை - எயினனூர். 'ஒழிந்து, அவன் கண்டிப்ப நின்றருளும் நித்தன்' என்க. ஈழக் குலம் - ஈழச் சான்றார் குலம். 1103. குறிப்புரை: இந்நாயனார் வரலாறு மேற்போந்த இரு திருக்கண்ணப்ப தேவர் திருமறங்களிலும் சொல்லப்பட்டது. 1104. குறிப்புரை: கண்டம் - கழுத்து. 'சிவனை நிலைப்பித்தான்' என்பதில் இரண்டன் உருபும், பிறவினை விகுதியும் தொகுக்கப்பட்டன. 'கொடுத்துக்கொண்டு' என இயையும். காலனைக் காய்ந்த அரன், திருக்கடவூர்ப் பெருமான். 1105. குறிப்புரை: 'கன்னியாகிய புதல்வி' என்க. 'நல்ல' என்பது இடைக்குறைந்து நின்றது. பஞ்சவடி, மாவிரத மதத்தினர் மார்பில் அணியும் மயிர்க்கயிறு. அலசும் - (மகள்) வருந்துவாள். கஞ்சை - கஞ்சாறூர்.
|