பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை792

அரிவாட்டாய நாயனார்

1106.வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோ னுகலுமிங்கே
வெள்ளச் சடையா யமுதுசெய் யாவிடி லென்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன்காண்
அள்ளற் பழனக் கணமங் கலத்தரி வாட்டாயனே.

14

ஆனாய நாயனார்

1107.தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்த்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாய னென்னை யுவந்தாண் டருளினனே.

15

சுந்தரமூர்த்தி நாயனார்

1108.அருட்டுறை யத்தற் கடிமைப்பட் டேனினி யல்லனென்னும்
பொருட்டுறை யாவதென் னேயென்ன வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரானடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே.

16

மூர்த்தி நாயனார்

1109.அவந்திரி குண்டம ணாவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டவொண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே.

17


1106. குறிப்புரை: வள்ளற் பிரான் - சிவபெருமான். அமுது - நிவேதன அமுது. உகலும் - தவறிக் கீழ் கொட்டிப்போன பொழுது. கணமங்கலம், ஊர்.

1107. குறிப்புரை: தாயவன் - தாய்போன்றவன். துளை - துளைக் கருவி. வேய் - மூங்கில். 'துளையால் தொடர்ந்து பரவும் வேயவன்' என்க. பரவுதல் - துதித்தல். மங்கலம், ஊர். 'ஆன் ஆயன் - பசுக்களை மேய்க்கும் இடையன்.

1108. குறிப்புரை: இதன் முதல் இரண்டடிகள் "பித்தா பிறை சூடி" எனத் தொடங்கும் திருப்பதிகத்தின் பொருளை உணர்த்தி நின்றன. குவளை மலர்கள் கருநிறத்தன ஆகலின் அவற்றை இருட்டாக உருவகம் செய்தார். நாவல், திருநாவலூர்.

1109. குறிப்புரை: குண்டு அமண் ஆவதில் மாள்வன் - கீழான சமண் சமயத்து அரசன் வழிப்பட்டு எனது பணியை ஒழிப்பதைவிட இறந்துபடுவேன். நிவந்த - ஓங்கிய.