பக்கம் எண் :

849ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1225.மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று, மணிகுறுக்கி
வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில் மன்மதன் வில்குனித்த
கோலையெப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன் மலரின்று சூடிடினே.

44

1226.சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை நீயுங் கொடும்பகைநின்(று)
ஆடுதற் கேயத்த னைக்குனை யே,நின்னை யாடரவம்
வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே.

45

 

1225. குறிப்புரை: இப்பாட்டு, கைக்கிளைத் தலைவி தோழியைத் தூது செல்லும்படி குறையிரந்து கூறியது.

"வடுப்படு கொக்கினம் சூழ்" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.

'(நீ சென்று) காழித் தலைவன் மலரை (மாலையை) வாங்கிவந்து (என் கூந்தலில்) சூடிடின், (நான்) பிறைமுன் (மெலிவடையாது) நிற்பேன்; (சேவினங்களின் கழுத்தில் உள்ள மணிகளின் ஓசையைக் குறுகச் செய்வேன்; (அடக்குவேன்.) வேலையை (கடலை) பாடு (ஒலியை) அணைப்பேன்; (அடக்குவேன்.) மற்றும் மன்மதன் தனது வில்லை விளைத்து தொடுத்துள்ள கோலை ஒரு போதும் விடாமல் தடுப்பேன்' என இயைத்து இவ்வாறு பொருள் கொள்க. பிறை முதலியன காதல் மிக்கவரை மேலும் வருத்துவன ஆதலின், 'அவைகளால் யான் வருந்தி இறந்து படாது பிழைப்பேன்' என்பாள் இவ்வாறு கூறினாள். மாலை ஒப்பாகும் - காலம் வந்து வருத்த, அதற்கு ஒப்பாகத் தானும் உடன் கூடி வருத்துகின்ற. "நின்று, குறுக்கி, அணைத்து" என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. "மணி" என்பது, ஏற்புழிக் கோடலால் சேவினங்களது மணியைக் குறித்து, ஆகுபெயரால் அவற்றின் ஓசையை உணர்த்திற்று. ஆங்கு - அப்பொழுதே. கோல் - அம்பு. வடு - மா வடு. கொக்கு - மா மரம். சோலை ஐ - சோலையினது அழகை உடைய. "மலர்" என்பதும் ஆகுபெயரால், மலரால் ஆகிய மாலையையே குறித்தது. "குனித்த" என்பது, 'குனித்துத் தொடுத்த' எனப் பொருள் தந்தது. 'சூடாவிடில் ஆற்றேன்' எனச் சூடாமையைப் பிரித்தலின், ஏகாரம் பிரிநிலை.

1226. குறிப்புரை: இதுவும் கைக்கிளைத் தலைவி கங்குலில் கண்படை பெறாது வருந்துதல் கண்டு தோழி நிலவைப் பழித்துக் கூறியது.

'வாள் மதியே! ஏசற்ற கொம்பினை நீயும் கொடும் பகையாய் நின்று ஆடுதலாகிய குற்றத்திற்காகத்தான் நின்னை அரவம்