பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை868

1259.தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்னருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி யே!மலர் மேலிருந்த
அனமே! யமிர்தக் குமுதச்செவ் வாயுங்க ளாயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற் சோலையு ளெய்துகவே.

78

1260.உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலையுரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால்,
பகட்டில் பொலியினும் வேண்டேன், ஒருவரைப் பாடுதலே.

79

 

இடம் - பேரின்பம் ததும்பும் இடம். அறியார்; முற்றெச்சம். உறு - மிகுதி. 'இஃது உறு பேய்த்தனம்' என்க. பேய்த்தனம் - பேய்த் தன்மை அஃதாவது, பித்து.

1259. குறிப்புரை: இப்பாட்டு, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தலைவியை ஆய்த்து உய்த்தது.

தனம் தரு புகழ் - பொருள் வழங்கியதனால் உண்டாகிய புகழ். அது தந்தையார் சிவபாத இருதயருக்கும், திருவீழி மிழலையில் பஞ்ச காலத்தில் பலர்க்கும் வழங்கியது. 'அன்னம்' என்பது இடைக்குறைந்து நின்றது. "செவ்வாய்" என்றதும் 'சிவந்த வாயை உடையவளே' - என்றவாறேயாம். பொலிய - (நீ இல்லாமையால் இழந்த) பொலிவைப் பெற்று விளங்கும்படி. இங்ஙனம் கூறியதனால், 'நீ செலவு தாழ்ப்பின் ஆயத்தார் தேடி வருவர்' என்பது குறிப்பித்தான். "சைவ சிகாமணிதன் அருள் போல் மனம் புகுந்த" - என்றதனால், 'அவ்வருள் போல நீ என் உயிரினும் சிறந்தாய் ஆதலின், நீ எங்கிருப்பினும் உனை நான் இமைப் போதளவின் மறவேன்' எனத் தனது காதற் சிறப்பு உணர்த்தினான்.

1260. குறிப்புரை: "உகட்டித்து" என்னும் பிறவினை வினைச்சொல், 'உகண்டு' எனத் தன்வினையாய் நின்றது. உகளுதல் - பிறழ்தல், எழும்பிக் குதித்தல். மோட்டு வரால் இனம் - பெரிய வரால் மீனின் கூட்டம். மேதி - எருமை. உரிஞ்ச - உராய. அகடு - வயிறு அஃது ஆகுபெயராய், மடியைக் குறித்தது 'அகட்டினின்றும் சொரிபால் என்க. தடம் - தடாகம். கொச்சைவயம் சீகாழி. தகடு- பொன் தகடு. மணி - இரத்தினம். பூண் - அணிகலம். பகடு - யானை. ஒருவரை - வேறு ஒருவரை 'வேறு' என்பது தமிழாகரரோடு இயைபில்லாமை 'யானைமேற் செல்லும் செல்வத்தைப் பெறுவதாயினும்; தமிழாகரரோடு சிறிதும் இயைபில்லாத ஒருவரைப் பாடுதலை வேண்டேன்' என்பதாம்.