பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை918

40.ஆகமங்கள் கேட்பார், அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார், - சோகமின்றி

41.நீதி நிலையுணர்வார், நீள்நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறு வார், - ஆதி

42.அருங்கலைநூல் ஓதுவார், ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார்; - ஒருங்கிருந்து

43.காமநூல் கேட்பார், கலைஞானங் காதலிப்பார்,
ஓமநூல் ஓதுவார்க்(கு) உத்தரிப்பார், - பூமன்னும்

44.நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாழும் தகைமைத்தாய், - நாமன்னும்
 

- வடமொழி இலக்கண நூல். தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள். அவை வேதத்தின் ஆறங்க நூல்கள். கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை, கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன. ஆதரித்து - விரும்பி. ‘பொருளால், போகத்தை ஒடுங்காது துய்ப்பார்’ - என்க. இங்ஙனம் கூறியது, “உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்”1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு. சோகம் - துன்பம் “இன்றி உணர்வார்” என்பதை, ‘உணர்ந்து இலராவார்’ என மாற்றிக் கொள்க. ‘சோகம் - இணைப்பு’ - எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம். ‘ஐம்புலனிலும்’ என ஐந்தாம் உருபு விரிக்க. ஆதி - வேதத்தின் முற்பகுதி. அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம். ‘இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்’ என்க. கனல் - முத்தீ. வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல். இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.

கற்(று) ஆங்கு எரி ஓம்பிக்

கலியை வாராமே

செற்றார் வாழ் தில்லை2

என அருளிச் செய்தது காண்க. காமமும் உறுதிப் பொருள் களுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பால தாயிற்று. கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும் மெய்யுணர்வு. இதனை ‘அபரஞானம்’ என்பர். ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம். ‘ஓதுவார்க்கு’ என நான்கன் உருபு விரிக்க. உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார். இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.


1.நாலடி
2. திருமுறை