பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
122

இயற்கைப் புணர்ச்சி

திணையின்கண் முதற்கிடந்த காட்சியென்னும் ஒருதலைக் காமத்தினையும், உடனிலைச் சிலேடையாகவுணர்த்துதனுதலிற்று.

    திருவளர்தாமரை ......போன்றொளிர்கின்றதே.
        மதிவாணுதல் ....... கண்ணுற்றது.

இதன் பொருள்: திருவளர் தாமரை - திருவளருந் தாமரைப் பூவினையும்; சீர்வளர் காவிகள் - அழகு வளரு நீலப் பூக்களையும்;  ஈசர்தில்லைக் குருவளர் பூ குமிழ் - ஈசர் தில்லைவரைப்பின் கணுண்டாகிய பூங்குமிழினது நிறம்வளரும் பூவினையும்; கோங்கு-கோங்கரும்புகளையும்; பைங்காந்தள் கொண்டு - செவ்விக் காந்தட்பூக்களையும் உறுப்பாகக் கொண்டு; ஓங்கு தெய்வ மரு வளர் மாலை ஓர் வல்லியின் ஒல்கி - மேம்பட்ட தெய்வ மணம் வளரும் மாலை ஒருவல்லிபோல நுடங்கி; அன நடை வாய்ந்து - அன்னத்தினடைபோல நடைவாய்ந்து; உரு வளர் காமன்தன் வென்றிக் கொடி போன்று ஒளிர்கின்றது-வடிவுவளருங் காமனது வெற்றிக்கொடி போன்று விளங்காநின்றது; என்ன வியப்போ!  என்றவாறு.

    திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்றவாறு. திருமகடங்குந் தாமரையெனினுமமையும். பூங்குமிழென்பது, முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்ற தோராகுபெயர். ஈசர் தில்லையென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. பல நிலங்கட்குமுரிய பூக்களைக் கூறியவதனால், நில மயக்கங் கூறியவாறாயிற்று. ஆகவே, பல நிலங்களினுஞ் சென்று துய்க்கு மின்பமெல்லாந் தில்லையின் வாழ்வார் ஆண்டிருந்தே துய்ப்பரென்பது போதரும். போதர, இம்மையின்பத்திற்குத் தில்லையே காரணமென்பது கூறியவாறாயிற்று. ஆகவே, ஈசர் தில்லை யென்றதனான், மறுமையின்பத்திற்குங் காரணமாதல் சொல்லாமையே விளங்கும். செய்யுளாதலாற் செவ்வெண்ணின்றொகை தொக்கு நின்றது. ஓங்கு மாலையெனவியையும், தெய்வ மருவளர்மாலை யென்றதனால், தாமரை முதலாயினவற்றானியன்ற பிறமாலையோடு இதற்கு வேற்றுமை கூறியவாறாம். வாய்ந்தென்பது நடையின் வினையாகலாற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்தது. உருவளர்காமன்றன் வென்றிக் கொடியென்றது நுதல் விழிக்குத்தோற்று உருவிழப்பதன் முன் மடியாவாணையனாய் நின்றுயர்த்த கொடியை. அன நடைவாய்ந்தென்பதற்கு அவ்வவ்வியல்பு வாய்ப்பப் பெற்றெனினுமமையும்.