பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
129

1

இயற்கைப் புணர்ச்சி

1.3. தெளிதல்

தெளிதல் என்பது ஐயுற்றபின்னர் அவயவமியங்கக்கண்டு இவள் தெய்வமல்லளென்று தெளியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

3. பாயும் விடையரன் றில்லையன்
      னாள்படைக் கண்ணிமைக்குந்
  தோயு நிலத்தடி தூமலர்
      வாடுந் துயரமெய்தி
  ஆயு மனனே யணங்கல்ல
      ளம்மா முலைசுமந்து
  தேயு மருங்குற் பெரும்பணைத்
      தோளிச் சிறுநுதலே.

3

_________________________________________________________________

1.3.  அணங்கல்லளென் றயில்வேலவன்
     குணங்களைநோக்கிக் குறித்துரைத்தது.


   
இதன் பொருள்: பாயும் விடை அரன் தில்லை அன்னாள் - பாய்ந்து செல்லும் விடையையுடைய அரனது தில்லையை யொப்பாளுடைய;  படைகண் இமைக்கும் - படைபோலுங் கண்கள் இமையா நின்றன ; நிலத்து அடி தோயும்-நிலத்தின் கண் அடி தீண்டா நின்றன; தூமலர் வாடும்-தூய மலர்கள் வாடா நின்றன. ஆதலின்-துயரம் எய்தி ஆயும் மனனே-துயரத்தையெய்தி ஆராயும் மனனே; அம் மாமுலை சுமந்து-அழகிய பெரியவாகிய முலைகளைச் சுமந்து; தேயும் மருங்குல்-தேயாநின்ற மருங்குலையும்; பணை பெருந்தோள் - பணைபோலும் பெரிய தோள்களையும் உடைய; இச்சிறு நுதல் அணங்கு அல்லள்-இச்சிறு நுதல் தெய்வம் அல்லள் எ-று.

   
துயரமெய்தி யாயுமனனே யென்றதனால், தெளிதல் கூறப்பட்டதாம், மெய்ப்பாடு; மருட்கையின் நீங்கிய பெருமிதம். என்னை,

    கல்வி தறுக ணிசைமை கொடையெனச்
    சொல்லப் பட்ட பெருமித நான்கே

-தொல். பொருள் மெய்ப்பாட்டியல் - 9

என்றாராகலின், தெளிதலுங் கல்வியின் பாற்படும். பயன்: தெளிதல்.