2
பாங்கற் கூட்டம்
2.24 நாணிக்கண்புதைத்தல்
நாணிக்கண்புதைத்தல் என்பது
தலைமகன் தன்முன்னின்று பெரும்பான்மை கூறக்கேட்ட தலைமகள் பெருநாணினளாதலின் அவன் முன்னிற்கலாகாது
நாணி, ஒருகொடியினொதுங்கி, தன் கண்புதைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள் -
42. அகலிடந் தாவிய வானோ
னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்றொ
ழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
நையா வகையொ துங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
வாய்தரு பூங்கொடியே.
42
_______________________________________________________________
2.24. ஆயிடைத் தனிநின்
றாற்றா தழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி
மறைந்தது.
இதன் பொருள்: அகலிடம்
தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் - உலகத்தைத்
தாவி யளந்த வானவன் வணங்கப்படுவதென்றறிந்து வணங்கும் அம்பலத்தின்கணுளனாகிய இகலையுடைய விடங்களிலே
தாவும் விடையையுடைய ஈசனைத் தொழாதாரைப்போல; இன்னற்கு இடம் ஆய் உகல் இடம் தான் சென்று
எனது உயிர் நையாவகை - துன்பத்திற்கிடமாய் அழியுமளவைத் தானடைந்து எனதுயிர் நையாதவண்ணம்;
பொழில் வாய் எழில் வாய்தரு பூங் கொடியே - பொழிலிடத்துளவாகிய அழகுவாய்ந்த பூவை யுடையகொடியே;
ஒதுங்கப் புகலிடம் தா-யானொதுங்குதற்குப் புகலிடந் தருவாயாக எ-று.
உகலிடம் - உகுதற்கிடம்;
உகுதலையுடைய விடமெனினுமமையும், ஆயிடை - தலைமகன் அவ்வாறு கூறியவிடத்து. தனிநின்று-ஆற்றுவிப்பாரையின்றி
நின்று. ஆற்றாது-நாணினானாற்றாது. வேய்-வேய்த்தன்மை. மெய்ப்பாடு: அச்சம். பயன்: ஆற்றாமை
நீங்குதல்.
42
|