2
பாங்கற் கூட்டம்
2.26 நாண்விடவருந்தல்
நாண்விட வருந்தல் என்பது தலைமகன்
தனது ஆற்றாமை மிகுதிகூறக்கேட்டு, ஒருஞான்றுந் தன்னைவிட்டு நீங்காதநாண் அழலைச் சேர்ந்த
மெழுகுபோலத் தன்னைவிட்டு நீங்காநிற்ப, தலைமகள் அதற்குப் பிரிவாற்றாது வருந்தாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
44. குருநாண் மலர்ப்பொழில்
சூழ்தில்லைக்
கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா
துயிரிற்
பழகி யுடன்வளர்ந்த
அருநா ணளிய வழல்சேர்
மெழுகொத் தழிகின்றதே.
44
______________________________________________________________
2.26. ஆங்ங னம்கண் டாற்றா
ளாகி
நீங்கின நாணொடு நேரிழை நின்றது.
இதன் பொருள்: என் கண்மணி
போன்று - இன்றியமையாமையால் என் கண்மணியை யொத்து; உயிரின் பழகி - உயிர் போலச் சிறப்புடைத்தாய்ப்
பழகி; ஒருநாள் பிரியாது - ஒருபொழுதும் பிரியாது; உடன் வளர்ந்த-என்னுடனே வளர்ந்த; அரு அளிய
நாண் - பெறுதற்கரிய அளித்தாகிய நாண்; அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றது-அழலைச்சேர்ந்த மெழுகையொத்து
என்கணில்லாது அழியாநின்றது, அதனான் - குரு நாள் மலர்ப் பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்
போல் வருநாள் பிறவற்க - நிறத்தையுடையவாகிய நாண்மலர்களையுடைய பொழில்களாற் சூழப்பட்ட தில்லைக்
கணுளனாகிய கூத்தனையேத்தாதார் துன்புறும் பிறவியிற் பிறப்பாரன்றே அவர்களைப் போல மேல் வரக்கடவநாளில்
யான் இவ்வாறு பிறவாதொழிக எ-று.
வருநாள் பிறவற்க வென்பதற்கு
ஏத்தாதாரைப்போல வருந்த இவ்வாறு பயின்றாரைப் பிரியவரு நாள்கள் உளவாகா தொழிகவெனினுமமையும்,
வாழியென்பது இத்தன்மைத்தாகிய இடுக்கணின்றி இந்நாண் வாழ்வதாக வென்றவாறு. அரோவும் மற்றும்: அசைநிலை.
ஆங்ஙனங் கண்டு-அவ்வாற்றானாகக் கண்டு. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
|