பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
215

8

நாண நாட்டம்

8.5 மதியுடம்படுதல்

   
மதியுடம் படுதல் என்பது பலபடியும் நாணநாடிக் கூட்டமுண்மையுணர்ந் தோழி இம்மலையிடத்து இவ்விருவர்க்கும் இன்பத் துன்பங்கள் பொதுவாய் வாராநின்றன; அதனால் இவ்விருவர்க்கும் உயிரொன்றேயென வியந்து கூறாநிற்றல், அதற்குச் செய்யுள்-

71. காகத் திருக்கண்ணிற் கொன்றே
        மணிகலந் தாங்கிருவர்
   ஆகத்து ளோருயிர் கண்டனம்
        யாமின்றி யாவையுமாம்
   ஏகத் தொருவ னிரும்பொழி
        லம்பல வன்மலையில்
   தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
        வருமின்பத் துன்பங்களே.

71

_____________________________________________________________

8.5.  அயில்வேற் கண்ணியொ டாடவன்றனக் குயிரொன்றென
     மயிலியற் றோழி மதியுடம் பட்டது.


   
இதன் பொருள்: யாவையும் ஆம் ஏகத்து ஒருவன் - எல்லாப் பொருள்களுமாய் விரியும் ஒன்றையுடைய வொருவன்; இரும்பொழில் அம்பலவன் - பெரிய பொழில்களாற் சூழப்பட்ட அம்பலத்தையுடையான்; மலையில் தோகைக்கும் தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் ஒன்றாய் வரும்-அவனது மலையில் இத்தோகைக்கும் இத்தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் பொதுவாய் வாராநின்றன; அதனால் - காகத்து இரு கண்ணிற்கு மணி ஒன்றே கலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஓருயிர் யாம் இன்று கண்டனம்-காகத்தினிரண்டு கண்ணிற்கும் மணியொன்றே கலந்தாற்போல இருவர் யாக்கையுள் ஓருயிரை யாமின்று கண்டோம் எ-று.

   
யாவையுமாமேகம் - பராசக்தி. அம்பலவன் மலையில் இன்று யாங்கண்டன மென்று கூட்டி, வேறோரிடத்து வேறொரு காலத்து வேறொருவர் இது கண்டறிவாரில்லையென்பது படவுரைப்பினு மமையும். கலந்தாரிருவரென்பது பாடமாயின், ‘காகத்திருகண்ணிற் கொன்றே மணி’ யென்பதனை எடுத்துக்காட்டாக வுரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: மதியுடம்படுதல்.

நாணநாட்டம் முற்றிற்று.