பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
219

10

மடற்றிறம்

10.1 ஆற்றாதுரைத்தல்

   
ஆற்றாதுரைத்தல் என்பது தலைமகண்மேன் மடற்றிறங் கூறுகின்றானாகலின் அதற்கியைவுபட அவ்விருவருழைச் சென்று நின்று, நீயி்ர் அருளாமையின் என்னுயிர் அழியாநின்றது; இதனை அறிமினெனத் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

73. பொருளா வெனைப்புகுந் தாண்டு
        புரந்தரன் மாலயன்பால்
   இருளா யிருக்கு மொளிநின்ற
        சிற்றம் பலமெனலாஞ்
   சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
        செவ்வாய்த் துடியிடையீர்
   அருளா தொழியி னொழியா
        தழியுமென் னாருயிரே.

73

______________________________________________________________

10.1.  மல்லற்றிரள் வரைத்தோளவன்
     சொல்லாற்றாது சொல்லியது.


   
இதன் பொருள் புகுந்து என்னைப் பொருளா ஆண்டு - தானேவந்து புகுந்து என்னைப் பொருளாக மதித்தாண்டு; புரந்தரன்மால் அயன்பால் இருளாய் இருக்கும் ஒளி நின்றசிற்றம்பலம் எனல்ஆம் - இந்திரன் மால் அயனென்னும் அவர்களிடத்து இருளாயிருக்கின்ற ஒளி தங்கிய சிற்றம்பலமென்று சொல்லத்தகும்; சுருள் ஆர் கருங் குழல் வெள் நகைச் செவ்வாய்த் துடி இடையீர் - சுருளார்ந்த கரிய குழலினையும் வெள்ளிய நகையினையுஞ் செய்ய வாயினையுமுடைய துடியிடையீர்; அருளாதொழியின் என் ஆருயிர் ஒழியாது அழியும் - நீயிர் அருளாதொழியின் எனதாருயிர் தப்பாமலழியும், அதனான் அருளத்தகும் எ-று.

   
தொகையின்மையிற் பாலென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. சிற்றம்பலம் துடியிடையார்க்குவமை. மடற்றிறங் கூறுகின்றானாகலின், அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறுதல் கூறினான். சொல்லாற்றாது-சொல்லுதற்கும் ஆற்றாது. மெய்ப்பாடு: அழுகை, பயன்: ஆற்றாமை யுணர்த்துதல்.

73