பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
220

10

மடற்றிறம்

10.2 உலகின்மேல் வைத்துரைத்தல்

   
உலகின்மேல் வைத்துரைத்தல் என்பது ஆற்றாமைகூறி அது வழியாக நின்று, ஆடவர் தம்முள்ளமாகிய மீன் மகளிரது கண்வலைப்பட்டால் அதனைப் பெறுதற்கு வேறுபாயமில்லாத விடத்து மடலூர்ந்தும் அதனைப் பெறுவரென உலகின்மேல் வைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

74. காய்சின வேலன்ன மின்னியல்
        கண்ணின் வலைகலந்து
   வீசின போதுள்ள மீனிழந்
        தார்வியன் தென்புலியூர்
   ஈசன சாந்தும் எருக்கு
        மணிந்தோர் கிழிபிடித்துப்
   பாய்சின மாவென ஏறுவர்
        சீறூர்ப் பனைமடலே.

74

______________________________________________________________

10.2. புலவேலண்ணல் புனைமடலேற்
     றுலகின்மேல்வைத் துய்த்துரைத்தது.


   
இதன் பொருள்: காய் சினவேல் அன்ன மின் இயல் கண்வலை- காய்சினத்தையுடைய வேல்போலும் ஒளியியலுங் கண்ணகிய வலையை; கலந்து வீசினபோது உள்ளம் மீன் இழந்தார்-மகளிர் கலந்து வீசினபோது அவ்வலைப்படுதலான் உள்ளமாகிய மீனையிழந்தவர்கள்; வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து-பெரிய தென்புலியூர்க்கணுளனாகிய ஈசனுடைய நீற்றையும் எருக்கம்பூவையும் அணிந்து; ஓர் கிழி பிடித்து-ஒரு கிழியைக் கையிற்பிடித்து; பாய் சினமா எனப் பனை மடல் சீறூர் ஏறுவர்-பாய வல்ல சினத்தையுடைய மாவெனப் பனைமடலைச் சீறூர்க்கணேறுவர், தம்முள்ளம் பெறுதற்கு வேறுபாய மில்லாதவிடத்து எ-று.

   
மின்னியல்வேலென்று கூட்டினு மமையும். இன்: அல்வழிச்சாரியை, கண்ணென்வலையென்பதூஉம் பாடம். மகளிரென ஒரு சொல் வருவியாது கருவி கருத்தாவாக உரைப்பினுமமையும். உள்ளமிழந்தவர் உள்ளம்பெறுமளவும் தம்வய மின்றி மடலின் வயத்தராய் நிற்றலால் கருவி கருத்தாவாகக் கொள்க. சாந்தும் எருக்குமென இரண்டாகலின் ஈசனவெனப் பன்மையுருபு கொடுத்தார். பாய்சினமென்புழிச் சினம் உள்ளமிகுதி. உய்த்துரைத்தது-குறிப்பாலுரைத்தது.

74