பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
221

10

மடற்றிறம்

10.3 தன்துணிபுரைத்தல்

   
தன்துணிபுரைத்தல் என்பது முன்னுலகின்மேல் வைத்துணர்த்தி அதுவழியாக நின்று, என்னையும் ஒருபெண் கொடி பிறரிகழ மடலேறப்பண்ணாநின்றதென முன்னிலைப்புற மொழியாகத் தன்றுணிபு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

75. விண்ணை மடங்க விரிநீர்
        பரந்துவெற் புக்கரப்ப
   மண்ணை மடங்க வருமொரு
        காலத்து மன்னிநிற்கும்
   அண்ணல் மடங்க லதளம்
        பலவ னருளிலர்போற்
   பெண்ணை மடன்மிசை யான்வரப்
        பண்ணிற்றொர் பெண்கொடியே.

75

______________________________________________________________

10.3.  மானவேலவன் மடன்மாமிசை
     யானுமேறுவ னென்னவுரைத்தது.


   
இதன் பொருள் : விண் மடங்க - விண் மடங்கவும், விரி நீர் பரந்து கரப்ப - விரிநீர் பரத்தலான் வெற்பொளிப்பவும்; மண் மடங்க வரும் ஒருகாலத்தும் மன்னிநிற்கும் அண்ணல் - மண் மடங்கவும் வரும் ஊழியிறுதியாகிய ஒரு காலத்தின்கண்ணும் நிலைபெற்றுநிற்கும் அண்ணல்; மடங்கல் அதள் அம்பலவன் - சிங்கத்தினது தோலையுடைய அம்பலவன்; அருள் இலர் போல் பெண்ணை மடல்மிசை யான் வரப் பண்ணிற்று ஓர் பெண் கொடி - அவனதருளில்லாதாரைப் போலப் பிறரிகழப் பனைமடன்மேல் யான் வரும் வண்ணம் அறிவின்மையைச் செய்தது ஒருபெண்கொடி எ-று.

   
விண்ணை மண்ணை என்புழி ஐகாரம்: அசைநிலை. மடங்குதல்-தத்தங்காரணங்களினொடுங்குதல், மடங்கல்    -  புலியெனினுமமையும், மானம் - கொண்டாட்டம்; வேலை யுடையவனது மானமாகிய குணம் வேன் மேலேற்றப் பட்ட தெனினுமமையும். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: இளிவரல். பயன்: ஆற்றாமை யுணர்த்துதல்.

75