பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
230

11

குறை நயப்புக் கூறல்

11.1 குறிப்பறிதல்

   
குறிப்பறிதல் என்பது தலைமகனது குறைகூறத் துணியா நின்ற தோழி தெற்றெனக் கூறுவேனாயின் இவள் இதனை மறுக்கவுங் கூடுமென உட்கொண்டு, நம்புனத்தின்கட் சேயினது வடிவையுடையராய்ச் சினவேலேந்தி ஒருவர் பலகாலும் வாரா நின்றார்; வந்து நின்று ஒன்று சொல்லுவதுஞ் செய்கின்றிலர்; அவரிடத்து யாஞ்செய்யத்தக்க தியாதெனத் தான் அறியாதாள் போலத் தலைமகளோடு உசாவி, அவணினைவறியாநிற்றல். என்னை,

ஆங்குணர்ந் தல்லது கிழவோ டேத்துத்
    தான்குறை யுறுத றோழிக் கில்லை

-இறையனாரகப்பொருள் -8

என்பவாகலின். அதற்குச் செய்யுள்-

82. தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
        வண்டுதண் டேன்பருகித்
   தேதே யெனுந்தில்லை யோன்சே
        யெனச்சின வேலொருவர்

____________________________________________________________

11.1.  நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்
     குள்ளறி குற்ற வொள்ளிழை யுரைத்தது.

   
இதன் பொருள்: மாதே-மாதே; தாது ஏய் மலர்க் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி-தாதுபொருந்திய மலரையுடைய குஞ்சிகளின்கண் அழகிய சிறகையுடைய வண்டினங்கள் தண்டேனைப் பருகி; தேதே எனும் தில்லையோன் சேய் என-தேதேயெனப்பாடுந் தில்லையையுடையானுடைய புதல்வனாகிய முருகவேளென்றே சொல்லும் வண்ணம்; சின வேல் ஒருவர் புனத்திடை வாளா வருவர்-சினவேலையுடையாரொருவர் நம்புனத்தின்கண் வாளா பலகாலும் வாராநிற்பர்; வந்து யாதும் சொல்லார்-வந்து நின்று ஒன்று முரையாடார்; மது வார்குழல் ஏந்திழையே-மதுவார்ந்த குழலை யுடைய ஏந்திழாய்; செயத் தக்கது யாதே-அவரிடத்து நாஞ்செய்யத் தக்கது யாதென்றறிகின்றிலேன் எ-று.