பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
238

11

குறை நயப்புக் கூறல்

11.6 புலந்துகூறல்

   
புலந்து கூறல் என்பது வெளிப்படக் கூறாது வஞ்சித்துக் கூறுதலான் என்னோடிதனை வெளிப்படக் கூறாயாயின் நின்காதற் றோழியர்க்கு வெளிப்படச்சொல்லி அவரோடு சூழ்ந்து நினக்குற்றது செய்வாய்; யான்சொன்ன அறியாமையை நின்னுள்ளத்துக் கொள்ளாது மறப்பாயாக; யான் வேண்டுவதிதுவேயெனத் தோழி தலைமகளோடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

87. உள்ளப் படுவன வுள்ளி
        யுரைத்தக் கவர்க்குரைத்து
   மெள்ளப் படிறு துணிதுணி
        யேலிது வேண்டுவல்யான்
   கள்ளப் படிறர்க் கருளா
        அரன்தில்லை காணலர்போற்
   கொள்ளப் படாது மறப்ப
        தறிவிலென் கூற்றுக்களே.

87

____________________________________________________________

11.6.  திருந்திய சொல்லிற் செவ்வி பெறாது
     வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது.

   
இதன் பொருள்: உள்ளப்  படுவன உள்ளி - இதன் கண் ஆராயப்படுவன- வற்றை ஆராய்ந்து; உரைத் தக்கவர்க்கு உரைத்து - இதனை வெளிப் படவுரைத்தற்குத் தக்க நின் காதற்றோழியர்க்குரைத்து; படிறு மெள்ளத்துணி-அவரோடுஞ் சூழ்ந்து நீ படிறென்று கருதிய இதனை மெள்ளத் துணிவாய்; துணியேல் - அன்றித் துணியா தொழிவாய்; கள்ளப் படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல் - நெஞ்சிற் கள்ளத்தையுடைய வஞ்சகர்க்கு அருள் செய்யாத அரனது தில்லையை ஒருகாற் காணாதாரைப்போல்:  அறிவிலென் கூற்றுக்கள் கொள்ளப்படாது -அறிவில்லாதேன் சொல்லிய சொற்களை உள்ளத்துக் கொள்ளத்தகாது; மறப்பது-அவற்றை மறப்பாயாக; யான் வேண்டுவல் இது - யான் வேண்டுவதிதுவே எ-று.

   
தில்லை காணலர் தோழிகூற்றிற்குவமை. கொள்ளப்படாதென்பது வினைமுதன்மேலுஞ் செயப்படு பொருண் மேலுமன்றி வினைமேனின்ற முற்றுச்சொல், “அகத்தின்னா வஞ்சரை யஞ்சப்