பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
274

12

சேட் படை

12.26 தழைவிருப்புரைத்தல்

தழை விருப்புரைத்தல் என்பது தலைமகளைத் தழை யேற்பித்துத் தலைமகனுழைச் சென்று நீ தந்த தழையை யான்சென்று கொடுத்தேன்; அதுகொண்டு அவள் செய்தது சொல்லிற் பெருகுமெனத் தலைமகளது விருப்பங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

115.  பாசத் தளையறுத் தாண்டுகொண்
        டோன்தில்லை யம்பலஞ்சூழ்
    தேசத் தனசெம்மல் நீதந்
        தனசென் றியான்கொடுத்தேன்
    பேசிற் பெருகுஞ் சுருங்கு
        மருங்குல் பெயர்ந்தரைத்துப்
    பூசிற் றிலளன்றிச் செய்யா
        தனவில்லை பூந்தழையே.

115

____________________________________________________________

12.26.  விருப்பவள் தோழி
      பொருப்பற் குரைத்தது.


   
இதன் பொருள்:  பாசத்தளை அறுத்து-பாசமாகிய தளையிற் பட்டுக்கிடப்ப அத்தளையை யறுத்து; ஆண்டு கொண்டோன் தில்லை யம்பலம் சூழ் தேசத்தன-தனக்குக் குற்றேவல் செய்ய  என்னை யடிமைகொண்டவனது தில்லையம்பலத்தைச் சூழ்ந்த தேசத்தின் கணுள்ளன; செம்மல்! நீ தந்தன-அச்சிறப்பே யன்றிச் செம்மால் நின்னாற் றரப்பட்டன; சென்று யான் கொடுத்தேன்-அவற்றைச் சென்று யான் கொடுத்தேன்; பேசில் பெருகும்-கொடுப்ப ஆண்டு நிகழ்ந்தன வற்றைச் சொல்லுவேனாயிற் பெருகும்; சுருங்கு மருங்குல்-சுருங்கிய மருங்குலையுடையாள்; பூந்தழை-அப்பூந்தழையை; அரைத்துப் பூசிற்றிலள் அன்றிப் பெயர்ந்து செய்யாதன இல்லை-அரைத்துத் தன்மேனியெங்கும் பூசிற்றிலளல்லது பெயர்த்துச் செய்யாதனவில்லை எ-று. என்றது இவை வாடுமென்று கருதாது அரைத்துப் பூசினாற் போலத் தன்மேனிமுழுதும் படுத்தாள் என்றவாறு. பெயர்த்தென்பது பெயர்ந்தென மெலிந்துநின்றது. பிசைந்தரைத்தென்று பாட மோதுவாருமுளர். மெய்ப்பாடு:  உவகை. பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.

சேட் படை முற்றிற்று.