பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
310

13

பகற் குறி

13.28 கொய்தமைகூறி வரைவுகடாதல்

   
கொய்தமைகூறி வரைவுகடாதல் என்பது இரக்கமுற்று வரைவுகடாயதோழி எதிர்ப்பட்டு நின்று, இப்புனத்துத்தினையுள்ளது இன்றுதொடர்பறக்கொய்தற்றது; எமக்குமினிப்புனங்காவலில்லை; யாமுமக்கறிவு சொல்லுகின்றேமல்லேம்; நீரேயறிவீரெனத்தினை கொய்தமைகூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

143. பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம்
        புகலப் புகலெமக்காம்
    விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
        மேல்வரு மூரெரித்த
    நெருப்பர்க்கு நீடம் பலவருக்
        கன்பர் குலநிலத்துக்
    கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
        தின்றிக் கடிப்புனமே.

143

________________________________________________

13.28.  நீடிரும்புனத்தினி யாடேமென்று
      வரைவுதோன்ற வுரைசெய்தது.


   
இதன் பொருள்: எமக்குப் புகலாம் விருப்பர்க்கு-எமக்குப் புகலிடமாதற்குக் காரணமாகிய விருப்பத்தையுடையவர்க்கு; யாவர்க்கும் மேலர்க்கு-எல்லார்க்கு மேலாயவர்க்கு; மேல் வரும் ஊர் எரித்த நெருப்பர்க்கு-ஆகாயத்தின்கட் செல்லுமூர்களையெரித்த நெருப்பை யுடையவர்க்கு; நீடு அம்பலவருக்கு-நிலைபெற்ற வம்பலத்தையுடையவர்க்கு; அன்பர் குலம் நிலத்துக்கருப்பற்று விட்டென-அன்பராயினாருடைய குலங்கள் உலகத்துப் பிறவிக்காரணத்தைப் பற்றுவிட்டகன்றாற் போல; இக்கடிப்புனம் இன்று கொய்தற்றது-இக்காவலையுடைய புனம் இப்பொழுது தொடர்பறக் கொய்தற்றது. அதனால்-பொருப்பர்க்கு யாம் ஒன்றும் புகலமாட்டேம்-பொருப்பர்க் கியாமொன்றுஞ் சொல்லமாட்டேம் எ-று.

   
யாமொரு குணமுமில்லேமாயினுந் தமது விருப்பினாலெமக்குப் புகலிடமாயினாரென்னுங் கருத்தால், புகலெமக்காம் விருப்பர்க் கென்றார். எம்மால்  விரும்பப்படுவார்க்  கென்பாருமுளர். வீடென வென்பதூஉம் பாடம்.

143