பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
36

கூம

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

கூம்பலங் கைத்தலத் தன்பரென் பூடுரு கக்குனிக்கும்
    பாம்பலங் காரப் பரன்றில்லை யம்பலம் பாடலரின்
    தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள் தீங்கனி வாய்கமழும்
    ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே.

(தி.8 கோவை பா.11)

சிற்றம்பலத்தும் சிந்தையுள்ளும்: 

இறைவன் புறத்தே சிற்றம்பலத்திலும் அகத்தே சிந்தையுள்ளும் தகராகாசத்திலும் உறைபவன். அங்ஙனம் உறைபவன், கூடலாகிய மதுரையில் தலைச்சங்கம் அமர்ந்து ஆய்வு செய்த இயற்றமிழாகிய எளிய இனிய தமிழின் துறைவாய் ஆய்வுசெய்ய நுழைந்தனையோ? அன்று ஏழிசைச் சூழல் ஆய்வு செய்யப் புக்கனையோ? இவ்விரண்டும் உடலை மெலிவிக்கும், உயிரை உயர்விக்கும். எனவேதான் தோள் மெலிந்திருக்கும் காரணம் என்னவோ? என்று பாங்கன் தலைவனை வினவுகிறான்.

தலைவன் தலைவியைப் பிரிந்து அவள் நினைவாகவே ஏங்குதலால் அவன் உடல் மெலிவுற்றது. இதனைத் தமிழ் ஆய்வு மேலும், தமிழிசை ஆய்வு மேலும் வைத்து வினவினான். இம்மூன்றாலும் உடல் மெலியும் என்பதைப் பின்வரும் பாடலில் குறிப்பிட்டவாறு உணரலாம்.

    சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என்சிந்தையுள்ளும்
    உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்
    துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ?
    இறைவா தடவரைத் தோட்கு என்கொலாம் புகுந்து எய்தியதே.

(தி.8 கோவை பா.20)

கோம்பிக்கு ஓங்கி மேயா மஞ்ஞை: 

   
பாம்பு யானையைக் கொல்லும் ஆற்றல் உடையது. அப்பாம்பைக் கொல்லும் ஆற்றல் உடையது மயில். அத்தகைய ஆற்றல்மிக்க மயிலைப் பச்சோந்தி கொன்றுவிடும். இஃது என்போல்வதெனின், கொங்கைகட்கு மெலியும் இடையானது என் ஆற்றலை அழித்துவிட்டது. எனது ஆற்றல் எப்படிப்பட்டது எனில், தில்லைச் சிவனார் தாள் சூடிய திறத்தால் புறப் பகையோடு அகப்பகையாகிய வினையையும் வெல்ல வல்லது. எனவே பச்சோந்திக்கு ஆற்றல் மிக்க மயில் அஞ்சுவது போல, அருள் மிக்க யான் இவள் இடைக்கு அஞ்சுகிறேன் என்கிறான் தலைவன்.