16
16.2 மகட்பேச்சுரைத்தல்
மகட்பேச்சுரைத்தல் என்பது பருவங்கூறிய
தோழி, படைத்து மொழியான் அயலவர் பலரும் மேன்மேலும் பொன்னணியக் கருதாநின்றார்; நீ விரைய
வரைவொடு வருவாயாதல் அன்றியுடன்கொண்டு போவாயாதல் இரண்டினுளொன்று துணிந்துசெய்யக் கருதுவாய்;
அதனை யின்றே செய்வாயாகவெனத் தலைமகனுக்கு அயலவர் வந்து மகட்பேசல் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
195. மணியக் கணியும் அரன்நஞ்ச
மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
மேன்மே லயலவரே.
195
____________________________________________________________
16.2. படைத்துமொழி கிளவியிற் பணிமொழிப் பாங்கி
அடற்கதிர் வேலோற் கறிய வுரைத்தது.
இதன் பொருள்: துறைவா
- துறைவா; தில்லை அன்னாள் திறத்துத் துணியக் கருதுவது இன்றே துணி - தில்லையையொப் பாடிறத்து
நீ துணிந்து செய்யக்கருதுவதனை இன்றே துணிந்து செய்வாயாக; அயலவர் நிறை பொன் மேன்மேல் அணியக்
கருது கின்றார் பலர் - அயலவர் நிறைந்த பொன்னை மேன்மேலு மணியக் கருதுகின்றார் பலர் எ-று.
மணி அக்கு அணியும் அரன் - மணியாகிய
அக்கையணியுமரன்; நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணை தரும் பரன் -நஞ்சையஞ்சிக்
கலங்கிச்சுழன்று தேவர் சென்று பணிய அந்நஞ்சான்வருமிடர்க்கு மருந்தாகத் தன் கருணையைக்
கொடுக்கும் பரன்; தில்லை - அவனது தில்லையெனக் கூட்டுக.
அக்குமணி யெனினுமமையும்.
அலங்காரம்: ஒற்றுமைக் கொளுவுதல். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: அது.
195
|