பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
386

16

உடன் போக்கு

16.11 கற்பு நலனுரைத்தல்

   
கற்பு நலனுரைத்தல் என்பது தலைமகனைப் போக்குடம் படுத்திய தோழி, தலைமகளுழைச்சென்று, மகளிர்க்குப் பாதுகாக்கப் படுவனவற்றுள் நாண்போலச் சிறந்தது பிறிதில்லை; அத்தன்மைத்தாகியநாணுங் கற்புப்போலச் சீரியதன்றென உலகியல் கூறுவாள்போன்று, அவள் உடன்போக்குத் துணியக் கற்புநலங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

204. தாயிற் சிறந்தன்று நாண்தைய
        லாருக்கந் நாண்தகைசால்
    வேயிற் சிறந்தமென் றோளிதிண்
        கற்பின் விழுமிதன்றீங்

_______________________________________________________________

16.11.  பொய்யொத்தவிடை போக்குத்துணிய
      வையத் திடை வழக்கு ரைத்தது.

   
இதன் பொருள்: ஈங்கோயிற் சிறந்து சிற்றம்பலத்து ஆடும்-ஈங்கோ யிடத்துப் பொலிந்து மேவிச் சிற்றம்பலத்தின்கணின்றாடும்; எம் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதி நுதல் - எம்முடைய கூத்தனாகிய பிரானது வாயின்கண் எப்பொழுதும் வந்து சிறத்தற்குக் காரணமாகிய அறிவாற் சிறப்பையுடையையாகிய மதிநுதால்; தையலாருக்கு நாண் தாயின் சிறந்தன்று-மகளிர்க்குப்பழி நீக்கிப் பாதுகாத்தலில் நாண் தாய்போலச் சிறந்தது; அந்நாண்-அத்தன்மைத்தாகிய நாண்; தகை சால்வேயிற் சிறந்த மென்தோளி-அழகமைந்த வேய்போலச்சிறந்த மெல்லிய தோள்களை யுடையாய்-திண் கற்பின் விழுமிது அன்று-திண்ணிய கற்புப்போலச் சீரிதன்று எ-று.

    தாயினுஞ் சிறந்ததன்று நாணென்றுரைப்பினுமமையும். நாணென்பது ஒருபொருட் குரிமையாகலிற் றாயென வொருமை கூறினார். “ஏவலிளையர் தாய்வயிறு   கரிப்ப” என்பதுபோல அமையுமாறு முடைத்து. அன்றியும்.

    உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ்
    செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று.

(தொல்- பொருள் - களவியல் - 22)