பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
398

16

உடன் போக்கு

16.21 வழிப்படுத்துரைத்தல்

   
வழிப்படுத்துரைத்தல் என்பது ஓம்படுத்துரைத்த தோழி, ஆயமுமன்னையும் பின்வாராமல் இவ்விடத்தே நிறுத்தி இவ்வூரிடத்திலுள்ள அலரையு மொருவாற்றானீக்கி யானும்வந்து நுங்களைக் காண்பேனாக; நீயிருந் திருவொடுசென்று நும்பதியிடைச் சேர்வீராமி னென இருவரையும் வழிப்படுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

214. ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும்
        நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
    தாண்டொல்லை கண்டிடக் கூடுக
        நும்மைஎம் மைப்பிடித்தின்
    றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
        சிற்றம் பலம்நிலவு
    சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
        சேர்க திருத்தகவே.

214

_________________________________________________________________

16.21.  மதிநுதலியை வழிப்படுத்துப்
      பதிவயிற்பெயரும் பாங்கிபகர்ந்தது.


   
இதன் பொருள்: எம்மைப் பிடித்து ஆண்டு - எம்மை வலிந்து பிடித்தாண்டு; இன்று எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு -இன்று எல்லையைநீங்கிய வின்பத்தைத் தந்தவனது சிற்றம்பலம் நிலைபெற்ற; சேண்தில்லை மா நகர்வாய் - சேய்த்தாகிய தில்லை யாகிய பெரிய நகரிடத்து; திருத்தகச்சென்று சேர்க - நீர் பொலிவு தகச்சென்று சேர்வீராமின்; ஆயமும் ஒளவையும் ஈண்டு நீங்க - ஆயமுமன்னையும் பின்வாராது இவ்விடத்தே நீங்க; இவ்வூர்க்கௌவை ஒல்லை தீர்த்து - இவ்வூரின்க ணுண்டாகிய அலரை யொருவாற்றான் விரையநீக்கி; ஆண்டு நும்மை ஒல்லை கண்டிடக் கூடுக - யானாண்டுவந்து நும்மை விரையக் காணக் கூடுவதாக எ-று.

   
சேண்டில்லை யென்பதற்கு மதின்முதலாயின வற்றான் னுயர்ந்த தில்லையெனினுமமையும். ஒல்லைக் கண்டிடவென விகார வகையான் வல்லெழுத்துப் பெறாது நின்றது. மெய்ப்பாடு: அழுகை. பயன்: அச்சந் தவிர்த்தல்.

214