பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
430

16

உடன் போக்கு

16.50 வேதியரை வினாவல்

   
வேதியரை வினாவல் என்பது விரதியரை வினாவி, அதுவழியாகச் செல்லாநின்றவள், மான்போலு நோக்கினையும், மயில் போலுஞ் சாயலையுமுடைய மான் ஓரேந்தலோடு நும்மெதிரே வரக்கண்டீரோவென வேதியரை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

243. வெதிரேய் கரத்துமென் தோலேய்
        சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
    அதிரேய் மறையினிவ் வாறுசெல்
        வீர்தில்லை அம்பலத்துக்
    கதிரேய் சடையோன் கரமான்
        எனவொரு மான்மயில்போல்
    எதிரே வருமே சுரமே
        வெறுப்பவொ ரேந்தலொடே.

243

______________________________________________________________

16.50.  மாதின்பின் வருஞ்செவிலி
      வேதியரை விரும்பிவினாயது.


   
இதன் பொருள்: வெதிர் ஏய் கரத்து - மூங்கிற்றண்டு பொருந்திய கையினையும்; மெல் தோல் ஏய் சுவல் - மெல்லிய கலைத் தோலியைந்த சுவலினையும்;  வெள்ளை நூலின் - வெள்ளை நூலினையும்;  கொண்மூ அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் - கொண்மூவினது முழக்கம்போலு மறையொலியினையுமுடைய இந்நெறிச் செல்வீர்; ஒரு மான் - ஒருமான்; தில்லை அம்பலத்துக் கதிர் ஏய் சடையோன் கரமான் என -தில்லையம்பலத்தின் கணுளனாகிய மதிசேர்ந்த சடையையுடையவனது கரத்தின்மான் போல மருண்ட நோக்கத்தளாய்; மயில்போல்-மயில்போல வசைந்த சாயலாளாய்; சுரமே வெறுப்ப ஒரு ஏந்தலொடு எதிரே வருமே-வருத்துஞ் சுரந்தானே கண்டுதுன்புற ஓரேந்தலோடு நும்மெதிரே வந்தாளோ? உரைமின் எ-று.

   
தோலேய்ந்த சுவலின்கணுண்டாகிய வெள்ளை நூலினையு மெனினுமமையும். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு அது. பயன்: தலைமகளைக் காண்டால்.