| 2 
அணிந்துரை 
    2) திருக்கோவையாருரையின் சமயச்
சார்பும், எதிர்ப்பும் தொல்காப்பியஉரையில் காணப்பெறவில்லை.
 
 3) தொல்காப்பிய உரையாசிரியர்
ஐந்திணைப் பெயர் பூவால் வந்தது
 என்பர். திருக்கோவையார் உரைகாரரோ, நிலத்தால் வந்தது என்பர்.
 
 4) தொல்காப்பிய உரையாசிரியர்
உவமை மட்டுமே கொள்வர். அதனையும்
 அணியென அழைப்பது பொருந்தாது என்னும் கொள்கையுடையவர்.
 திருக்கோவையார்
உரையாசிரியர் அலங்காரம் என்னும் பெயர் வழக்கிட்டு,
 சிலேடை, தற்குறிப்பேற்றம் முதலிய
பலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றார்.1
 
 பேராசிரியர் ஒருவரே ஆகுக, இருவர்
ஆகுக, அவர் வரைந்துள்ள திருக்கோவையாருரை, ஓர் இலக்கிய மூல நூலே போலச் சுவை மிளிர்ந்து
விளங்குகின்றது என்பதில் ஐயமின்று.
 
 கோவை இலக்கியங்களுள் முதலில் தோன்றியது
மாணிக்கவாசக அடிகள் அருளிய திருக்கோவையார். இதனைக் ‘கோவைத் திருவாசகம்’ என்றும் வழங்குவர்.
வேண்டியார்க்கு வேண்டியாங்கு மணங் கமழும் மனோரஞ்சித மலர் போல, இந்நூல் பல்வேறு நோக்கத்துடன்
பயில்வோர்க்கு அவ்வச் சிற்புக்களுடன் திகழ்வதாகும். அது பற்றி இதனைப் பாராட்டிய
சான்றோர்,
 
 ஆரணங் காண்என்பர் அந்தணர்
யோகியர் ஆகமத்தின்
 காரணங் காண்என்பர் காமுகர் காமநன்
னூலதென்பர்
 ஏரணங் காண்என்பர் எண்ணர் எழுத்தென்பர்
இன்புலவோர்
 சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச்
செப்பிடினே.
 
-ஆன்றோர் வாக்கு 
என்று புகழ்ந்துரைத்தனர்.
 ‘திருச்சிற்றம்பலக் கோவை’ என்றும்
வழங்கும் திருக்கோவையார் உயர்திணைப் பன்மை ஈறு புணர்த்துக் கூறப்பெறுவதே இதன் சிறப்பை உணர்த்தும்.
இஃது அகப்பொருள் நூலாயினும், மெய்ந்நூற் கருத்துக்களை - சைவநெறி சார்ந்த உண்மைகளை - கற்பார்
உளங்கொள உரைக்கும் பாங்கு வியந்து போற்றற்குரியது.
 
_______________  
1பேராசிரியர் உரைத்
திறன், மு. சந்தானம், 1991 |