பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
453

17

வரைவு முடுக்கம்

17.12 இரவும்பகலும் வரவுவிலக்கல்

   
இரவும்பகலும் வரவுவிலக்கல் என்பது இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலக்கின தோழி, நீ பகல்வரின் அலர்மிகுதி யானெங்களுக்கு மிக்கபழி வந்தெய்தும்; இராவரின் எவ்வாற்றானு நின்னை யெதிர்ப்படுதலருமையாற் சிறிதும் பயனில்லை; அதனால் நீ யிருபொழுதும் வரற்பாலையல்லையென இரவும் பகலும் வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

261. சுழியா வருபெரு நீர்சென்னி
        வைத்தென்னைத் தன்தொழும்பில்
    கழியா அருள்வைத்த சிற்றம்
        பலவன் கரந்தருமான்
    விழியா வரும்புரி மென்குழ
        லாள்திறத் தையமெய்யே
    பழியாம் பகல்வரின் நீயிர
        வேதும் பயனில்லையே.

261

______________________________________________________________

17.12.  இரவும் பகலும்
      வரவொழி கென்றது.

இதன் பொருள்ஐய - ஐயனே; நீ பகல் வரின் புரி மென்குழலாள் திறத்து மெய்யே பழியாம்-நீ பகல்வரிற் சுருண்ட மெல்லிய குழலையுடையாடிறத்து மெய்யாகவே அலருண்டாம்; இரவு ஏதும் பயன் இல்லை-இராவரின் எதிர்ப்படுத லருமையாற் சிறிதும் பயனில்லை; அதனான் நீயிருபொழுதும் வாரல் எ-று.

    சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து - சுழியாநின்று வரும் பெரியநீரைச் சென்னியின்கண் வைத்து; தன் தொழும்பின் என்னைக் கழியா அருள் வைத்த - தனக்குத் தொண்டுபடுதற்கண் என்னை நீங்காத தன்னருளான்வைத்த; சிற்றம்பலவன் கரம்தரும் மான் விழியா வரும் புரி மென்குழலாள் - சிற்றம்பலவனது கரத்தின்கண் வைக்கப் பட்ட மான்போல விழித்துவரும் புரிமென்குழலாளெனக் கூட்டுக.

   
பரந்துவரும் பெரும்புனலை வேகந்தணித்துத் தன் சென்னியின்கண் வைத்தாற் போல நில்லாது பரக்கு நெஞ்சை யுடையேனைத் தன்னருட்க ணடக்கினானென்பது கருத்து. தன்றொழும்பினின்றும் யானீங்காமைக்குக் காரணமாகிய அருட்கணென்னை வைத்தவனெனினு மமையும். மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக் குறியும் பகற்குறியும் விலக்கி வரைவுகடாதல்.

261