New Page 1
உரைமாட்சி
‘வரிசேர் தடங்கண்ணி’ என்று
தொடங்கும் திருக்கோவையார் 83ஆம் பாடல் உரையில், ‘தளிரன்னமேனியன், ஈர்ந்தழையன்,
இத்தேம்புனம்பிரியான்’ என்புழி வினைமுற்றுக்களே வினையெச்சங்களாக வந்துள்ளன என்ற
கருத்தில், ‘மேனியன் தழையன் என்பன வினையெச்சங்கள்’ என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
‘குறப்பாவை’ என்று தொடங்கும்
205ஆம் பாடலில் ‘நறப்பாடலம் புனைவார் நினைவார்’ என்புழிப் ‘புனைவார் என்னும்
முற்றுச்சொல் செயவென் எச்சமாகத் திரித்து உரைக்கப்பட்டது’ என விளக்கந் தரப்பட்டுள்ளது.
இவற்றால் இவ்வுரையாசிரியர்
வினைமுற்றே வினையெச்சமாகும் என்னும் கருத்துடையர் என்பது பெறப்படுகிறது. ஆகவே, எச்சமே
முற்றாகும் என்ற நச்சினார்க்கினியரினும், முற்றே எச்சமாகும் என்ற கருத்துடைய
இவ்வுரையாசிரியர் வேறாவர் என்பது தெளிவு.
திருக்கோவையார்
உரையாசிரியர் சேனாவரையர் ஆகார்:
‘எல்லாம் என்னும் பெயர்நிலைக்
கிளவி, பல்வழி நுதலிய நிலைத்தாகும்மே’ என்னும் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பெயரியல்
32ஆம் சூத்திரத்திற்குச் சேனாவரையர், ‘எல்லாம் என்னும் பெயர் இருதிணைக் கண்ணும் பன்மை
குறித்து வரும்’ என்று பொருள்கூறி, ‘அஃது எஞ்சாப் பொருட்டாய் வருவதோர் உரிச்சொல்
என்பாருமுளர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். எல்லாம் என்பது பெயர்ச் சொல்லேயன்றி
உரிச்சொல் அன்று என்பது சேனாவரையர் கருத்தாகும்.
திருக்கோவையார் 351ஆம்
பாடலில் ‘வெஞ்சுரம் சென்றதெல்லாம். . . . . . . பூவணைமேல் அணையாமுன் துவளுற்றதே’ என்ற
தொடரின் உரை விளக்கத்தில், ‘எல்லாம் என்பது முழுதும் என்னும் பொருள்பட நின்றதோர்
உரிச்சொல். பன்மை ஒருமை மயக்கம் என்பாரு முளர்’ என்று குறிப்பிடும் உரையாசிரியர் எல்லாம்
என்பது உரிச்சொல் என்னும் கருத்தினர். எல்லாம் என்பது இருதிணைக் கண்ணும் பன்மை
குறித்துவரும் பெயர் என்ற சேனாவரையர் கொள்கையை மறுக்காமல் ‘எல்லாம் துவளுற்றதே’ என்ற
தொடர், ‘பன்மை ஒருமை மயக்கம் என்பாருமுளர்’ எனப்பிறன்கோட் கூறலாகத் தழுவிக்
கொண்டுள்ளனர்.
தொல்காப்பியச்
சொல்லதிகார 114ஆம் நூற்பாவுரையுள் சேனாவரையர் அன்மொழித்தொகை எச்சவியலுட் கூறப்படினும்,
அஃது ஆகுபெயராதல் உடைமை பற்றி வேற்றுமை மயங்கியலில் கூறப்பட்டது என ஆகுபெயரும்
அன்மொழித்தொகையும் ஒன்றே
|