பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
519

21

21. காவற்பிரிவு

இனிக் காவற்பிரிவு என்பது எல்லாவுயிர்களையும் அரசன் பாதுகாக்கவென்னுந் தருமநூல்விதியான் அக்காவற்குப் பிரிதல். அதுவருமாறு

    பிரிவறி வித்தல் பிரிவுகேட் டிரங்கல்
    வருபவை யிரண்டும் வையங் காவல்.

21.1 பிரிவறிவித்தல்

   
பிரிவறிவித்தல் என்பது தருமநூல் விதியால் நமர் உலகத்தைப் பாதுகாப்பான் பிரியக் கருதாநின்றாரெனத் தலைமகன் காவலுக்குப் பிரியக் கருதாநின்றமை தோழி தலைமகளுக் கறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்-

312. மூப்பான் இளையவன் முன்னவன்
        பின்னவன் முப்புரங்கள்
    வீப்பான் வியன்தில்லை யானரு
        ளால்விரி நீருலகங்
    காப்பான் பிரியக் கருதுகின்
        றார்நமர் கார்க்கயற்கட்
    பூப்பால் நலமொளி ரும்புரி
        தாழ்குழற் பூங்கொடியே.

312

________________________________________________

காவற்பிரிவு-இதன் பொருள்: பிரிவறிவித்தல், பிரிவுகேட்டிரங்கல் என விவை இரண்டுங் காவற்பிரிவாம் எ-று. அவற்றுள்-

21.1.  இருநிலங் காவற் கேகுவர் நமரெனப்
     பொருசுடர் வேலோன் போக்கறி வித்தது.

   
இதன் பொருள்: கார்க் கயற் கண் பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ்குழல் பூங்கொடி - கரியகயல்போலுங் கண்ணினையும் பூவின்கண் நறுநாற்றமுடைமை யாகிய நன்மைவிளங்குஞ் சுருண்ட தாழ்ந்த குழலையுமுடைய பூங்கொடியை யொப்பாய்; மூப்பான் - எல்லார் யாக்கைக்கும் முன்னே தனதிச்சையாற் கொள்ளப்பட்ட திருமேனியையுடைய னாதலின் எல்லார்க்குந் தான் மூப்பான்;