பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
53

உரைமாட்சி

விளக்கவுரையில் மெல்லிய தோளில் எழுதிய கரும்பை உடையாளை எனினும் அமையும் என்று வேறு பொருள் கூறியும் உள்ளமை போன்ற இடங்கள் பல.  

பிறன்கோட் கூறல் :  

ஒரு சொற்றொடர்க்குத் தாம் வரைந்த பொருளின் வேறாக ஒரு பொருள் வழங்குமாயின் அதனை என்பாருமுளர் என்னும் பிறன்கோட் கூறலாகத் தழுவிக்கோடலும் இவ்வுரையின் இயல்பாகும்.

32ஆம் பாடலில் ‘வாய் பவளம் துடிக்கின்றவா’ என்ற தொடருக்கு வாய்பவளம் துடித்தாற்போலத் துடிக்கின்ற ஆறு என் என்று உரை கூறி, பவளம் போலப்பாடஞ் செய்கின்றவாறென் என்று உரைப்பாரும் உளர் என்று மற்றோருரையைத் தழுவுவது போன்று பல இடங்களில் காணலாம்.

பாடவேறுபாடு :  

பாடல்களில் காணப்படும் வேறுபட்ட பாடங்களைச் சுட்டிக் காட்டி அப்பாடங்களுக்கு ஏற்பப் பொருள்கொள்ளுமாற்றையும் விளக்கிச்செல்லுதலை இவ்வுரையில் எங்கும் காணலாம்.

10ஆம் பாடலில் ‘கிளவியை என்னோ இனிக் கிள்ளையார் வாயில் கேட்கின்றதே’ என்று பாடமோதி கிள்ளைபோல்வாள் வாயின் மொழியை இனிக் கேட்க வேண்டுகின்றதென்? என்று உரை கூறி, மொழி கிளிமொழியோடு ஒக்கும் என்பது போதரக் கிள்ளையார் என்றான் என்று விளக்கமும் வரைந்த உரையாசிரியர், வயின் என்பது பாடமாயின் வாயின் என்பது குறுகி நின்றதாக வுரைக்க ; வயின் இடம் எனினும் அமையும் என்று பாட வேறுபாட்டைச் சுட்டி அதற்குப் பொருள் காணுமாற்றையும் கூறிச்செல்லுதல் காண்க.

எழுத்து, சொல் இலக்கணச் செய்திகள் :  

11ஆம் பாடலில் கூம்பலங்கைத்தலத்தன்பர் என்பதில் அல்லும் அம்மும் சாரியைகளாகக், கூம்பு கைத்தலத் தன்பர் என்று கொண்டு பொருளுரைத்ததும், தேம்பலஞ்சிற்றிடை என்பதிலும் அவற்றைச் சாரியைகளாகக் கொண்டு தேம்பு சிற்றிடையாகக் கொண்டு பொருள் கூறியுள்ளதும் போன்றன எழுத்திலக்கணச் செய்திகள். 235ஆம் பாடலில் ‘நலச்சேட்டைக் குலக்கொடியே’ என்ற ககர ஒற்று இடையே மிக்க தொடருக்கு நல்ல சேட்டையையுடைய சீரிய கொடியே என்றும், ககர ஒற்று இடையே மிகாது நின்ற ‘நலச்சேட்டை குலக்கொடியே’ என்ற தொடருக்குச் சேட்டையாகிய தெய்வத்தின் நல்ல கொடியே என்றும் பொருள் கூறுதல் போன்ற சொல்லிலக்கணச் செய்திகளை இவ்வுரையில் நிரம்பக் காணலாம்.