பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
555

24

பொருள் வயிற் பிரிவு

24.10 உருவுவெளிப்பட்டுநிற்றல்

   
உருவுவெளிப்பட்டு நிற்றல் என்பது தலைமகள் இகழ்ச்சி நினைந்தழியாநிற்ப, தானுணர்த்தாது பிரிந்தமையுட் கொண்ட பொருள் வலித்த நெஞ்சொடு செல்லாநின்ற தலைமகன், காணுந்திசைதோறுங் கயலையும் வில்லையுஞ் சிவந்த கனியையு முலையையுங் கொண்டு ஒரு பூங்கொடி தோன்றாநின்றதெனத் தலைமகளதுருவை நினைந்து மேற்போகமாட்டாது மீளலுற்றுச் சுரத்திடை நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-

341. சேணுந் திகழ்மதிற் சிற்றம்
        பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்
    சூணுந் திருத்து மொருவன்
        திருத்தும் உலகினெல்லாங்
    காணுந் திசைதொறுங் கார்க்கய
        லுஞ்செங் கனியொடுபைம்
    பூணும் புணர்முலை யுங்கொண்டு
        தோன்றுமொர் பூங்கொடியே.

341

____________________________________________________________

24.10.  பொருள்வயிற் பிரிந்த ஒளியுறு வேலவன்
       ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது.

   
இதன் பொருள்: சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் - சேய்மைக் கண்ணும் விளங்கும் மதிலையுடைய சிற்றம்பலத்தை யுடையான்; தெள் நீர்க் கடல் நஞ்சு ஊணும் திருத்தும் ஒருவன் - தெளிந்த நீரையுடைய கடலினஞ்சை உணவாகவுஞ் செய்யு மொப்பிலாதான்; திருத்தும் உலகின் எல்லாம் - அவனாற் செய்யப்படு முலகினெங்கும்; காணும் திசை தொறும்-பார்க்குந் திசைதோறும்; கார்க் கயலும் - கண்ணாகிய கரியகயல்களையும்; செங்கனியொடு - வாயாகிய செய்யகனி யோடும்; பைம் பூணும்-பசும்பொன்னா னியன்ற பூணையும்; புணர் முலையும் கொண்டு - தம்முட் புணர்ந்த முலைகளையுமுடைத்தாய்; ஓர் பூங்கொடி தோன்றும் - ஒருபூங்கொடி தோன்றா நின்றது எ-று.

   
நஞ்சுண்டலையுங் குற்றந்தீக்குமெனவுரைப்பினுமமையும். ஊணுந் திருத்துமென்பது அதுசெய்யுந் தன்மையனென்னும் பொருட்டாகலின், நிகழ்காலத்தாற் கூறினார்.

341