பக்கம் எண் :

மூலமும் உரையும்39



கரிந்தன்ன காடு-நாடானது தன் வளனெலாங் கெட்டுப் பாழாயினாற் போன்று பாழ்பட்டுக் கரிந்துகிடக்கும் காட்டினை; கடந்து இயங்கி-கடந்து போய்; இடும்பை நிரப்பினார்க்கு-நினக்குத் துன்பத்தையே நிரம்பச் செய்யும் நந்தமர்க்கு; ஈதலின்-பரியமாக வழங்குதற் பொருட்டே; இறந்தோர்க்கு-நம்மைப் பிரிந்து சென்ற நம்பெருமான் பொருட்டு; அம் தாமரை இதழ் நிறை மது துளித் தென-அழகிய செந்தாமரை மலர் தன் இதழ்களினிரம்பத் தேனைச் சொரிந்தாற்போன்று; விழி சொரி நீருடன்-நின் விழிகள் சொரியா நின்ற கண்ணீரோடே; பழங் கண் கொண்டால்-நீ இவ்வாறு வருந்தினால்; என்க.

     (வி-ம்.) “பகை நட்பாங் காலம் வருங்கான் முகநட்டு அகநட்பு ஒரீஇ விட”லே முறையாகவும் அங்ஙனம் செய்யாது அவரோடு உறஉறக் கேண்மை கொள்ளுதலும் செய்த அரசன் என்க. பிரித்தல் என்றமையால் தங்கேளிர் என்பது பெற்றாம். “பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்” என வரும் திருக்குறளையும் (450) நினைக.

     உட்பகையாவது-புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந்துணையும் உள்ளய் நிற்கும் பகை. இது களைந் தொழிக்க வேண்டியதாகவும் அதனை வளர்ப்பது குற்றமாயிற்று. ஈண்டு,

“எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்
 உட்பகை யுள்ளதாங் கேடு”
(குறள் - 889)

எனவும்,

“வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு”

(குறள் - 882)

எனவும் வரும் திருக்குறள்களையும் நினைக.

     ஒரு தொழில்-ஆட்சித் தொழில். தான் மேற்கொண்டதொரு போர்த் தொழிற்கு எனினுமாம். ஒரு தொழிற்கு இருபகை தீராது வளர்த்தலாவது-தனக்கு இரு பகைவர் தோன்றியவழி அவ்விருவருள் ஒரு பகைவனை உபாயத்தால் தனக்குத் துணையாக்கிக் கொண்டு எஞ்சிய பகைவனை அழித்தல். இங்ஙனம் செய்யாமல் அவ்விருவரையுமே தனக்குப் பகைவராக்கிக் கோடல் என்றவாறு. ஈண்டு

“தன்றுணை யின்றால் பகையிரண்டால் தானொருவ
 னின்றுதுணையாக் கொள்கவற்றி னொன்று”

(குறள் - 875)

எனவரும் திருக்குறளை நினைக.

     “வழக்கினைப் பொருத்தல் முதலிய குற்றங்களைச் செய்து வைத்து அமைச்சருடனும் கூடாது அறிவிலியாகிய அரசன்” என்க. இனி இங்ஙன்மின்றி, பொருத்தல் முதலியவற்றைச் செய்யாத அமைச்சன் என்று பழைய வுரையாசிரியர் கூறுவர். செய்யா-செய்து; செய்யா: என்னும் வாய்ப்பாட்டுத் தெரிநிலை வினையெச்சம்.