பக்கம் எண் :

562கல்லாடம்[செய்யுள்79]



11-15: பிறை....................போல்

     (இ-ள்) பிறை நுதல் நாட்டி-பிறைபோலும் தன் நெற்றியிற் கண்ணுடையாளும்; கடு வளர் கண்டி-நஞ்சு திகழும் மிடற்றினையுடையாளும்; இறால் நறவு அருவி எழு பரங்குன்றத்து உறை-தேனடையினின்றுமொழுகும் தேன் அருவியாகப் பெருகியோடா நின்ற திருப்பரங்குன்றத்தின்கண் எழுந்தருளிய; சூர்ப் பகையினன்-சூரனுக்குப் பகைவனாகிய முருகக் கடவுளை; பெறு திரு வயிற்றினள்-பெற்ற பெருமையுடைய அழகிய வயிற்றையுடையாளும் ஆகிய கொற்றவை; ஒரு பால் பொலிந்த-ஒரு பக்கத்தில் விளங்கிய; உயர் நகரக் கூடல்-சிறந்த நகரமாகிய மதுரைமா நகரின்கண் எழுந்தருளிய; கடுக்கை அம்சடையினன்-கொன்றைமலர்மாலை யணிந்த சடையையுடைய சிவபெருமானது; கழல் உளத்து இலர் போல்-கழலணிந்த திருவடியை நெஞ்சினினையாத மடவோர் போல என்க.

     (வி-ம்.) நாட்டி-நாட்டத்தை (கண்ணை)யுடையாள்; கடு-நஞ்சு. கண்டி- கண்டத்தையுடையாள். கண்டம்-மிடறு. இறால்-தேனடை. சூர்-சூரன். சூர்ப்பகையினன்; முருகன். வயிற்றினள் ஒருபாற் பொலிந்த சடையினன்: கூடல் சடையினன் எனத் தனித்தனி கூட்டுக. கடுக்கை: ஆகுபெயர். கழலுமது.

16-18: பொய்....................என்றால்

     (இ-ள்) பொய் வரும் ஊரன்-பொய்ம்மொழிதல் கை வந்த தலைவன்; புக அரும் இல்புக-சான்றோர் புகுதற்கொண்ணாத பரத்தையர் இல்லத்தில் புகுதலாலே; என் உளம் சிகை விட்டு எழும் அனல் புக்க-என்னெஞ்சம் கொழுந்துவிட்டெரிகின்ற நெருப்பிலிடப்பட்ட; மதுபொழி முளரியின் மாழ்கினது என்றால்-தேன் பொழிகின்ற தாமரைமலர்போலக் கருகியதானால் என்க.

     (வி-ம்.) பொய் வருதல்-பொய்ம்மொழிதலின் வன்மையுறுதல். அரும்இல் என்புழி-அருமை, மாட்டாமை மேற்று. இல்-பரத்தையரில்லம்; சிகை-கொழுந்து. மாழ்குதல்-ஈண்டுக் கருகுதல்.

16-22: தோளில்.................................தடைந்தும்

     (இ-ள்) தோளில் துவண்டும்-அத்தகைய தலைவனுடைய தோளின்கட் கிடந்து புரண்டும்; தொங்கலுள் மறைந்தும்-அவனணிந்த மாலையினூடே மறைந்தும்; தைவரல் ஏற்றும்-அவன் வருடுதலை ஏற்றுக்கொண்டும்; கனவினும் தடைந்தும்-அவனைக் கண்ட கனவினும் செல்லற்க என்று தடுத்தும்; திரைக்கடல் தெய்வமுன் தெளிசூள் வாங்கியும்-அலையையுடைய கடற் றெய்வத்தின் முன்னர் நெஞ்சு தெளிதற்குக்