பக்கம் எண் :

638கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 375 ஆம் செய்யுள்:
பாணன் வரவுரைத்தல்

     அஃதாவது: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரியிடத்தானாக; நாணோடு வருந்தியுறையும் தலைவியிருந்த இல்லின்கண் தலைவன் இல்லாமையை அறியாத பாணனும் விறலியும், அவ்வில்லத்திற்குத் துயிலெழுமங்கலம் பாட வந்து நிற்ப அது கண்ட தோழி நொந்து தலைவிக்குக் கூறியது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

விறலியும் பானனும் வேந்தற்குத்
     தில்லை யிறையமைத்த
திரவியல் யாழ்கொண்டு வந்துநின்
     றார்சென் றிராத்திசைபோம்
பறவியல் வாவல் பகலுறை
     மாமரம் போலுமன்னோ
அறவியல் கூழைநல் லாய்தமி
     யோமை யறிந்திலரே.

இகல்கவே லவனகல் வறியாப் பாணனை பூங்குழன் மாதர்க்குப் பாங்கி பகர்ந்தது.

     (இ-ள்) விறலியும் பானனும்- விறலியும் பானனும்; தில்லை இறை அமைத்த திறல் இயல் யாழ்-தில்லையின்கண் எழுந்தருளியுள்ள இறைவனாலமைக்கப்பட்ட வெற்றியையுடைய யாழை; வேந்தற்குக் கொண்டுவந்து நின்றார்-நம் அரசனுக்குத் துயிலெழு மங்கலம் பாடுதற் பொருட்டுக் கொண்டுவந்து முன்றிலே நின்றார்கள்; அறல் இயல் கூழை நல்லாய்-கருமணல் போலும் கூந்தலையும் நன்மையையும் உடைய தோழியே; இராச்சென்று திசைபோம் பறல் இயல் வாவல்-இராப்பொழுதின்கட் சென்று திசையைக் கடக்கும் பறத்தலாகிய இயல்பினையுடைய வௌவால்; பகல் உறை மாமரம் போலும் தமியோமை அறிந்திலர்-இரைதேருங் காலமன்மையால் பகற்பொழுதின்கண் உறையும் பெரிய மரம் போலும் இராப்பொழுதில் துணையில்லாது தனித்திருக்கும் எந் நிலைமையை இவர் அறிந்திலர்போலும் என்க.

     (வி-ம்.) விறல் பட ஆடும் கூத்தி. திறல்-வெற்றி. யாழுக்கு வெற்றியாவது அவற்றுட் டலைசிறத்தல். “எம்மிறை நல்வீணை வாசிக்குமே” (திருநாவுக்கரசு தேவாரம். தனித்திருவிருத்தம். பொது. 7) என்பவாகலின் இறை அமைத்த யாழ் என்றார். பறல்-பறத்தலின் இடைக்குறை. மாமரம் போல என்றும் பாடம். வௌவால் உறையும் மரம் அவையெல்லாம் இரவில் இரைதேடப் போய்விடுதலால் தனித்து