பக்கம் எண் :

8கல்லாடம்[கடவுள்வாழ்த்து]



அதனுட் கிடந்தே மாய்தலின் என்க. கடற்றிரை, துயருக்குவமை. இடையறாது ஒன்றன்பின் ஒன்றாக வருகின்ற கடல் அலைகளினுங் காட்டில் உயிர்கட்கு வரும் துன்பங்கள் மிகுதி என்றவாறு. மலக்கு துயர்: வினைத்தொகை. மலக்குதல்-கலங்கச் செய்தல். வாய் இல் சிறை எனக் கண்ணழித்துக்கொள்க. உயிர் நினைந்துழி வெளியேறவும் உட்புகவும் வழியில்லாத சிறை என்றவாறு. அச்சிஐயை ஒரோவழி தகர்த்துவிட்டு வெளியேறுதல் கூடுமாயினும் அங்ஙனமும் செய்ய மனமின்றி அதனுட் கிடந்தே வருந்தும் என்று இரங்குவார் ‘சிறை நடுவு புக்குப் போகாது உணங்குறும்’ என்றார். வெள்ளறிவு-அறியாமை. ஆரணம்: ஆகுபெயர். ஆரணம் உணர்ந்த பெரியோர் என்க. மெய்யுணர்வோர் போற்றுதற்குரிய நின் திருவடிகளை வெள்ளறிவேமும் வணங்குதும் என்று தம் பேதமையை நினைத்து இரங்கியபடியாம்.

33 - 8: கான்முகம்............................தொகையும்

     (இ-ள்) கால்முகம் ஏற்ற-காற்றினைத் தன் முகத்திலே ஏற்றுக்கொண்ட; தொளைகொள்வாய் கறங்கும்-தொளையினையுடைய வாயினையுடைய காற்றாடியும்; விசைத்த நடைபோகும் சகடக் காலும்-விரைந்த செலவோடு செல்லுகின்ற பண்டியின் உருளையும்; நீட்டி வலி தள்ளிய நெடுங்கயிற்று ஊசலும்-நீலச் செலுத்தி வலிமையாலே தள்ளிவிடப்பட்ட நெடிய கயிற்றினையுடைய ஊசலும்; அலமருகாலும்-சுழலா நின்ற காற்றும்: அலகைத்தேரும்-பேய்த்தேரும்; குறைதரு பிறவியின் நிறைதரு கலக்கமும்-சுழற்சி முதலியவற்றால் தாழ்தற்குக் காரணமான பிறப்பினது நிறைந்த கலக்கத்தையும்; என் மனத்து எழுந்த புன்மொழித் தொகையும்-என் உள்ளத்திற் றோன்றிய புல்லிய இச்சொல் மாலையினையும் என்க.

     (வி-ம்.) பிறப்பின் சுழற்சிக்குக் காற்றாடியும், சகடக்காலும், ஊசலும், சூரைக்காற்றும், பேய்த்தேரும் உவமைகள். இவற்றின் சுழற்சியினுங் காட்டில் மிக்க சுழற்சியினையுடையது பிறப்பு என்றவாறு. மொழித்தொகை-சொன்மாலை.

39 - 30: அருள்...........................இன்றென

     (இ-ள்) அருள்பொழி கடைக்கண் தாக்கி-திருவருள் மழையைப் பொழிகின்ற நின் கடைக்கண் நோக்கத்தைச் செலுத்தி ஐய-ஐயனே!; இன்று-இப்பொழுது; தெருள் உற-தெளிவுண்டாக; முடிப்பை என-முடித்தருளவை என்று கருதியேயாம் என்க.

     (வி-ம்.) பொழி என்றமையால் அருள்மழை என்க. தாக்கி-செலுத்தி. தெருள்-தெளிவு. ஐய:விளி. முகத்த! கடத்த! எயிற்ற! செவிய! கரத்த! பதத்த! ஐய! உயிர் எண்ணமும் துயரமும் முடித்தல் நின்கடனாதலின் வெள்ளறிவேமும் நின்காலுற வணங்குதும், அஃதெற்றுக் கெனின் எம் பிறவிக்காலத்தையும் இம்மொழித் தொகை