பக்கம் எண் :

1224சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

ஏயும் இத்திறன் ஆயுங் காலை
யோகத் தகுதி யாகத் தகுமே
ஞான மின்மையென் றோதுவ தெவன்எனில்
உயிரும் உணர்வும் பயிலுத லின்றி
25 வேட்டுவன் உருவம் மென்புழு உணர்வு
கூட்டுத லால்உருக் கூடுத லானும்
முத்தியில் இறையிற் பற்றுத லின்றித்
தன்உரு அணைந்த பின்அதன் 1நினைவு
மாறுத லானும் ஊறுடைத் தன்றே

இவையிற்றை விட்டுவிடுவாயாக. இதன்றியும்; ஏயும் இத்திறன் ஆயுங்காலை
யோகத் தகுதியாகத் தகுமே - புழு வேட்டுவாளியானாற் போல ஆன்மாவுஞ்
சிவசொரூபமானதை ஆராயுமிடத்து யோகத்துக்குச் சொல்லலா மொழிந்து
ஞானத்துக்குப் பணியன்று; ஞானமின்மை யென்று ஓதுவது எவன் எனில் -
இது ஞானத்துக்குப் பணியல்ல வென்று சொன்னது ஏனென்னில்; உயிரும்
உணர்வும் பயிலுதலின்றி - ஆன்மாவும் சிவனும் கூடி ஒன்றுபட்டிருக்கிறதே
முத்தியென் றிருக்கச்செய்தே ஆன்மாவும் சிவமும் வேறு பட்டிருக்கு மென்று
நீ சொன்ன தோஷமுமன்றி; வேட்டுவன் உருவம் மென் புழு உணர்வு
கூட்டுதலால் உருக் கூடுதலானும் - வேட்டுவாளியினுடைய சொரூபத்தை
மெல்லிய புழுவினுடைய நினைவானது கூட்டுதலாலே உனக்கு முத்தியிலே
ஒரு சரீரம் கூடுகையினாலும்; முத்தியில் இறையிற் பற்றுதலின்றி - முத்தித்
தானத்திலே நீ ஒரு சொரூபத்தை யெடுத்தும் சிவனோடும் கூடியிருத்தலன்றி
வேறா யிருக்குமென்று சொன்ன தோஷமன்றியும்; தன்உரு அணைந்தபின்
அதன்நினைவு மாறுதலானும் - வேட்டுவாளியினுடைய சொரூபத்தைப்
புழுவானது பெற்றதற்குப் பின்பு முன்னே புழுவாயிருந்த நாம் இப்பொழுது
இந்த வேட்டுவாளியின் சொரூபத்தைப்பெற்று இந்தத் தொழில்களைச் செய்யப்
பெற்றோமே என்கிற நினைவு அதற்கு இல்லாதபடியாலும்; ஊறுடைத்தன்றே
- இதை ஞானத்தாலுண்டா முத்தியென்று சொல்லுகிறது குற்றத்தையுடைத்தாம்.
இது முத்தியில் ஆன்மா ஒரு சரீரத்தோடு கூடியிருக்கு மென்பதனை மறுத்தது.


     1. உணர்வு - பாடபேதம்.