முதற்குலோத்துங்கன், விக்கிரம சோழன், கோப்பெருஞ்சிங்கன் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் இறைவன் பெயர் “பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்” என்றும் ; இப்பதி “மிலாடு ஆகிய சனாதன வளநாட்டு குறுக்கை கூற்றத்துக்கு உட்பட்ட ஊர்” என்றும் குறிக்கப் பட்டுள்ளது. மேலும் முதற்குலோத்துங்க சோழனின் 48-ஆவது ஆண்டுக் காலத்திலிருந்த கீழையூர் இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோயில் நடராசமூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார் என்ற குறிப்பும் உள்ளது. (ஆனால் இன்று கோயிலில் நடராச மூர்த்தமேயில்லை.) கல்வெட்டில் வரும் இறைவனின் பெயரும், வழக்கில் சமஸ்கிருதத்தில் வழங்கும் பெயரும் ஒன்றாகவுள்ளன. ஆனால் பொற்குடம் கொடுத்த வரலாறு செவிவழிச் செய்தியாகவுங்கூட ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. ஊரிலுள்ள ஒரு முதியவர் ; இக்கோயில் கிணற்றிலிருந்து பொற்குடம் எடுத்ததாக, அவருடைய தாத்தா சொன்னதாக ஒரு செய்தியைச் சொன்னார். விவரம் தெரியவில்லை. “நல்வெணெய் விழுது பெய்தாடுதிர் நாடொறும் நெல்வெணெய் மேவியநீ ரே நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும் சொல் வணமிடுவது சொல்லே.” (சம்பந்தர்) - ‘அன்றகத்தின் நல்வெண்ணெய் உண்டொளித்த நாரணன் வந்தேத்துகின்ற நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. சொர்ணகடேஸ்வரர் - நெல்வெண்ணெயப்பர் திருக்கோயில் நெய்வெணைகிராமம் - கூவாடு அஞ்சல் (வழி) எறையூர் - உளுந்தூர்ப்பேட்டை வட்டம் விழுப்புரம் மாவட்டம் - 607 201. |