பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 187


உள்ளது. மேலூரில் வைணவ ஆலயம் உள்ளது. இவ்வூர் மக்கள் வழக்கில்,
‘திருக்கோயிலூர்’ என்று வழங்குகிறது.

     அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. அந்தகாசூரனை சம்ஹரித்த தலம்.
இத்தலம் வைணவப் பெருமையும் உடையது. இங்குள்ள திரிவிக்ரமப்
பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார், திருமங்கையாழ்வார் முதலிய ஆழ்வார்களால் மங்களாசாசனம்
செய்யப் பெற்ற திவ்வியதேசம்.

     ‘ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்’ என்று
சொல்லப்படும் முதலாழ்வார் மூவரின் வரலாற்று நிகழ்ச்சி இடம்பெற்ற தலம்
இதுவே.

     அறுபத்துமூவருள் ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட பதி
இஃது.

     சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி
     மாதொருபாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்
     வேத நன்னெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
     காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்தறிந்து ஏவல் செய்வார்”
                                      (பெ. புரா. மெய். புரா)

     இராசராசசோழன் பிறந்த ஊர். இவருடைய தமக்கை ‘குந்தவ்வை’
சுவாமிக்குப் ‘பொன் பூ’ வழங்கியதோடு சந்நிதியில் திருவிளக்குகள் ஏற்றிட
‘சாவா மூவா பேராடுகள் 300-ம், 2000 கழஞ்சு பொன்னும் ஊர்ச்
சபையாரிடம் ஒப்படைத்த செய்தியைக் கல்வெட்டால் அறிகிறோம்.

     கோயில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ளது.

     கபிலர் பாரி மகளிரைத் திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து,
அதன்பின்பு வடக்கிருந்து உயிர் விட்ட இடம், கோயிலின் பக்கத்தில்
ஆற்றின் நடுவில் ‘கபிலர் குகை’ என்னும் பெயரில் உள்ளது. இது
கோயிலமைப்பில் உள்ளது. உள்ளே சிவலிங்கம் உள்ளது. இவ்விடத்தில்
நின்று பார்த்தால் எதிரில் அறையணிநல்லூர் தலம் தெரிகிறது.
இத்திருமணத்திற்குப் பந்தல் போட்ட இடம் ‘மணம்பூண்டி’ என்னும்
பகுதியாக வழங்குகின்றது.

     இறைவன் - வீரட்டேஸ்வரர்
     இறைவி - சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி
     தலமரம் - வில்வம்
     தீர்த்தம் - தென்பெண்ணை (தட்சிண பிணாகினி)

     சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.