| இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மிகச் சிறப்பாக பதினான்கு நாள்களுக்கு நடைபெறுகின்றது. இவ்விழாவில் ஆறாம்நாள் விழாவாகப் பகலில் அறுபத்துமூவரும் இரவில் வெள்ளித் தேர்க் காட்சியும் நடைபெறுவதும் ; ஒன்பதாம் நாள் விழாவாக நடைபெறும் மாவடிச் சேவையும் ; பன்னிரண்டாம் நாள் விழாவாக நடைபெறும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் சிறப்பாகத் தரிசிக்கத்தக்கன. பதினான்காம் நாள் இரவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் சார்பில் நடைபெறும் திருமுறைப் பெருவிழா மிகச் சிறப்புடையதாகும். (சிவ சிவ ஒலி மண்டபக் கட்டளையும் ஸ்ரீ காசி மடத்தின் சார்பில் நடைபெறுகிறது.) ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சுந்தரர் இடக்கண் பெற்றது, பவித்ரோற்சவம், தைப்பூசம், கார்த்திகைச் சோமவாரங்கள், (கடைசி சோமவாரம் லட்சதீபம்) மாசிமகம், சிவராத்திரி, திருவாதிரை முதலியவை இத்திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு விழாக்களாகும். யாத்ரிகர்களுக்குரிய வசதிகளாகத் தங்குமிடங்களும், உணவு விடுதிகளும் இந்நகரில் வசதியாக உள்ளன. அரசின் சுற்றுலாத்துறை பயண மாளிகையும் இங்குள்ளது. மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண் பிறையானைப் பெண்ணொடு ஆணாகிய பெம்மானை இறையானை ஏர்கொள் கச்சித் திருவேகம்பத்(து) உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே. (சம்பந்தர்) கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல் ஏந்தி இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. (அப்பர்) பண்ணில்ஓசை பழத்தினில் இன்சுவை பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன் வண்ணமில்லி வடிவு வேறாயவன் கண்ணிலுண்மணி கச்சியேகம்பனே. (அப்பர்) முந்தைகாண் மூவரினும் முதலானான்காண் மூவிலைமேல் மூர்த்திகாண் முருகவேட்குத் தந்தைகாண் தண்கடமா முகத்தினாற்குத் தாதைகாண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச் |