காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, புத்தேரித் தெரு வழியாகக் கயிலாயநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் சென்று, கயிலாயநாதர் கோயிலுக்குச் சற்று முன்னால் இடப்புறமாக வயல் மத்தியில் அமைந்துள்ள இக்கோயிலை அடையலாம். குபேரன் வழிபட்ட பெருமையுடையது. சுந்தரர் பாடல் பெற்றது. இறைவன் - அனேகதங்காவதேஸ்வரர். சிறிய கோபுர வாயில். விசாலமான உள் இடம். கோயிலுள் மூலவர் சிவலிங்கத் திருமேனி அழகாக உள்ளது. சிறிய கோயில். சுந்தரர் பாடியுள்ள இத்தலப்பதிகம் - ‘தேனெய் புரிந்துழல்’ என்று தொடங்குவது ; அழகான கும்மிமெட்டில் அமைந்துள்ளது. பாடி அநுபவிக்கும்போது அச்சுவை வெளிப்படுகின்றது. மகாகும்பாபிஷேகம் 16.4.1999 அன்று நடைபெற்றுள்ளது. “தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு மானதிடந் திகழைங்கணையக் கோனை யெரித்தெரி யாடியிடங்குல வானதிடங் குறையா மறையாம் மானையிடத்ததொர் கையனிடம் மத மாறுபடப் பொழியும் மலைபோல் யானையுரித்த பிரானதிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே” (சுந்தரர்) - “சேர்ந்தவர்க்கே இங்காபதஞ் சற்று மில்லாத அனேக தங்காபதஞ்சேர் தயாநிதியே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. அனேகதங்காவதீஸ்வரர் திருக்கோயில் பிள்ளையார்பாளையம் - காஞ்சிபுரம் - 631 501. காஞ்சிபுரம் மாவட்டம். |