இவ்வினிய விழா தமிழகத் திருக்கோயில் விழாக்களில் புகழ் பெற்றதாகும். அம்பாள் ஆலயம் தர்மசம்வர்த்தினியின் திருச்சந்நிதி. தனிக் கோயிலாகப் பக்கத்தில் உள்ளது. கிழக்கு நோக்கியது. கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கருவறை, சிற்ப அழகு வாய்ந்தது - இழைக்கப் பட்ட கருங்கல்லால் ஆனது. வலம்வர வசதியுள்ளது. சூரியன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரி சந்நிதிகள் உள. அம்பாள் நின்ற கோலம். அபயகரமும் தொடையைத் தொட்டுக் கொண்டிருப்பது போல மற்றொரு கரமும் உள்ள அமைப்பு. நான்கு திருக்கரங்கள் நல்ல பொலிவு. அறம் வளர்த்த நாயகி, தரிசிக்கும் நம் உள்ளத்தில் ஆனந்தத்தையும் வளர்த்து அமைதியையும் அருளுகின்றாள். மாதந்தோறும் சித்திரைச் சதய நாளில் தென்கயிலைக் கோயிலிலும் சித்தரை ஆதிரையில் வடகயிலையீச்சரம் உலகமாதேவீச்சரம் கோயிலிலும் சிறப்பு ஆராதனை நடைபெறுகின்றது. திருக்கோயிலின் தெற்கு வாயிலுக்கு நேரேவுள்ள வீதியின் கோடியில் காவிரியில் இறங்கி நீராட நல்ல படித்துறைகளுடன் கூடிய நீராடு கட்டடம் உள்ளது. ஆளுநாயகன் கயிலையில் இருக்கையைக் காணுமது காதலித்த அப்பர், ‘பழுதில் சீர் திருவையாற்றில் காண்’ என இறைவன் பணிக்க. வடகோடியில் தீர்த்தத்தில் மூழ்கித் திருவையாற்றில் வந்து எழுந்த அத்திருக்குளம் - அப்பர் குளம் - தற்போது மக்கள் வழக்கில் ‘உப்பங்குளம்’ என்று மருவி, கோயிலின் மேலக்கோபுர வாயில் வழியே சென்று வலப்பக்கம் திரும்பிச் சென்றால் வீதியின் கோடியில் உள்ளது. நல்லபடித் துறைகள் உள்ளன. குளத்தின் எதிரில் ‘அபீஷ்ட வரத மகாகணபதி’ கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாகணபதி சந்நிதியும், பக்கத்தில் விசுவநாதர் விசாலாட்சி சந்நிதியும், துர்க்கை சந்நிதியும் உள்ளன. அப்பர்பெருமானின் சந்நிதியும் உள்ளது. இதற்கு எதிரில், சுவற்றில், குளத்திலிருந்து அப்பர் எழுவது போலவும் எதிரே இறைவன் ரிஷபாரூடராய்க் காட்சி தருவது போலவும் சித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஐயாறு செல்லும் அன்பர்கள், அவசியம் இத்திருக்குளத்தையும் கண்டு வர வேண்டும். பஞ்ச நதீஸ்வர் சந்நிதி முகப்பு வாயிலின் முன்னுள்ள ஒரு கல்வெட்டு வள்ளல் பச்சையப்பரின் அறக்கட்டளையை உணர்த்துகிறது. “இக்கட்டளை மூலம் ஒரு லட்சம் வராகன், முதல் தொகையாக வைக்கப்பட்டு அதிலிருந்து வரும் வட்டித்தொகையிலிருந்து ; |