நந்தியைத் தரிசிக்கலாம். செப்புக் கவசமிட்ட கொடிமரம். உள்கோபுரம் நுழைந்து, சென்றால் முன்மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதியுள்ளது - தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். நேரே மூலவர் சந்நிதி தெரிகின்றது. மூலமூர்த்தி மிகவும் சிறிய சிவலிங்கத் திருமேனி. சுயம்பு மூர்த்தியாகத் திகழும் இத் திருவுரு உள்ளங்கையளவே உள்ளது. நடராசசபை உள்ளது. மூலவரின் அணுக்க வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உளர். உள் மண்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் உட்புறம் “யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, ‘அவ்யானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம்’ உள்ளது. இதன் பக்கத்தில் உதங்கமுனிவர் இறைவனை வழிபடும் சிற்பம் உள்ளது. புகழ்ச்சோழர் திருமேனி உள்ளது. உதங்கமகரிஷியின் எதிரில் நடராச சபை உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவரிடத்தில் மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பெரியதும் சிறியதுமாக இரு தட்சிணாமூர்த்தி உருவங்கள் உள்ளன. பெரிய உருவம் சிறந்த சிற்பக் கலையழகுடன் திகழ்கின்றது. சிறியது சோழர் காலத்தியது. பெரியதாக வைக்க எண்ணி நாட்டுக் கோட்டை நகரத்தார் தம் திருப்பணியில் செய்து இரண்டையும் வைத்து விட்டார்கள். திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது. இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள. உறையூர்க் கோயிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை என்பதுபோல, கருவறையின் வெளிபக்கச் சுவரில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கருவறை வெளிச் சுவரில் மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன. சுற்றியுள்ள தூண்களில் பலவகையான சிற்பங்கள் உள்ளன. ஒரு தூணில் ஐந்து பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும்; நான்கு பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும் கண்ணுக்குப் பெருவிருந்தாவன. மற்றுமுள்ள பலதூண்களில், இறைவனின் கண்ணை அப்புதல், மன்மதன் பாணம், தபஸ்காமாட்சி, கோழியும் யானையும் நேருக்கு நேர் நின்றவாறு சண்டையிடும் காட்சி முதலான அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அம்பாளின் (காந்திமதியின்) சந்நிதியின் - கருவறையின் வெளிப் புறத்தில் வலம் வரும்போது பறவையின் கால், மனித உடல், யானைமுகம் கொண்ட அழகான சிற்பம் உள்ளது. அதன் மறு |