பக்கம் எண் :

472 திருமுறைத்தலங்கள்


     மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர்.
இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர்
பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும்.
திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும்
இவனேயாகும். (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக்குறிப்பு -
பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)

வடதளி : (மாடக்கோயில்)

    இறைவன் - தர்மபுரீஸ்வரர்
    இறைவி - விமலநாயகி

    இதன் பக்கத்தில் முழையூர் (வைப்புத்தலம்) உள்ளது. மக்கள்
இக்கோயிலை முழையூர்க் கோயில் என்று வழங்குகின்றனர்.

பழையாறை :

    இறைவன் - சோமேசர்
    இறைவி - சோமகலாம்பிகை
    தலமரம் - நெல்லி

    தீர்த்தம் - சோம தீர்த்தம் (எதிரில் உள்ளது. இக்குளத்துநீர் சித்தப்
பிரமை முதலியவைகளைப் போக்கவல்லது)

    கருடன், ஆதிசேஷன் வழிபட்ட தலம்.

    
பழையாறையில் நாணயச் சாலை இருந்த இடம் இன்று ‘கம்பட்ட
விசுவநாதர்’ ஆலயம் உள்ள இடமென்பர். (கம்பட்டம் - நாணயச் சாலை)
இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய
இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது.
குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள். இத்தகு
சிறப்புடைய பழையாறை, பாண்டியர் ஆதிக்கம் மேலோங்கியபோது தன்
சிறப்பை இழந்தது.

    இக்கோயில் சோழர் திருப்பணி பெற்றது. கிழக்கு பார்த்த சந்நிதி.
எதிரில் குளம். இன்று சீர்கெட்டுள்ளது. வெளிப்பிராகாரத்தில் அம்பாள்
கோயில் தெற்கு நோக்கியுள்ளது. கோயில்முன் மண்டபத்தில் உள்ள
கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்க்கை உருவமும்
அழகுடையன. இத்தலத்தைச் சூழ்ந்துள்ள (1) நல்லூர் (2) வலஞ்சுழி (3) சத்தி
முற்றம் (4) பட்டீச்சரம் (5) ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில்
தக்ஷிணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள்
வழக்கில் சொல்லப்படுகிறது.