முழுக்கவசத்தில் தரிசிக்கும் அழகே தனியழகு - திருநீற்றுப்பட்டை ஜ்வலிக்கிறது. ஆதீனத்தின் மேலாளர் ஒருவர் அங்கிருந்து கொண்டு கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றார். நல்ல பராமரிப்பு. நித்திய வழிபாடுகள் குறைவின்றி நடைபெறுகின்றன. மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ள இத்தலத்தில், கோயிலுக்கு விளக்கெரிக்க நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட செய்திகள் தெரியவருகின்றன. இத்தலம் மிகவும் உள்ளடங்கியிருப்பதால் யாத்திரை செல்வோர் முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டுச் செல்வது நல்லது. “புவன நாயகனே அகவுயிர்க்கும் அமுதே பூரணா ஆரணம் பொழியும் பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும் பசுபதீ பன்னகாபரணா அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்தடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே.” “என்னையுன் பாத பங்கயம் பணிவித்து என்பெலாம் உருக நீ எளியவந்து உன்னையென் பால்வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே முன்னையென் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்தமர்ந்து எனக்கே கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனிய ஆயினையே.” அஞ்சல் முகவரி :- அ/மி. பன்னகாபரணேஸ்வரர் திருக்கோயில் பன்னத்தெரு, மாராச்சேரி அஞ்சல் - (வழி) பாமணி 614 711. திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம் |