பக்கம் எண் :

170

 

தெள்ளிய நறிய தூய செழுஞ்சுதை மிளிரத் தீற்றி
வெள்ளியங் கிரியிற் றோன்றும் வியனிலை மாட நின்றும்
எள்ளரு மகர யாழி னெழால்மிடற் றொலியோ டொன்றித்
துள்ளிய மதுர கீதஞ் செவித்தொளை தொகுத்த தன்றே.    

88
   
 

கண்டுகேட் டுளமுங் கண்ணுங் களிப்புறீஇக் ககோள நாதன்
மண்டல வனத்த லைந்து வான்வழி பிடித்துச் செல்லுந்
தொண்டருக் காக்கு வித்த துரிசின்மா ளிகையீ தென்ன
ஒண்டவன் கருதி வல்லே யுறுவது கரும மென்னா.       

89
   
 

பொருக்கென வேகுங் காலை புறத்துலாஞ் செக்கர் மாண்டு
கருக்கல்வந் துற்ற தாகக் கானகத் துழல்வி லங்கின்
வருக்கநின் றுரற்று மோசை செவித்தொளை மறித லோடும்
வெருக்கொளீஇக் கலக்க முற்று வேதியன் கவல லுற்றான்.

90
   
 

புந்தியற் றயர்ந்து தூங்கிப் பொழுதுவீண் போக்க டித்துக்
கொந்திருட் படலம் போர்ப்பக் கொடுவிலங் குழலுங் காட்டில்
வந்திடர்ப் படுவன் பாவ மயற்றுயில் விளைத்த மோசம்
இந்தவா றாய துய்வுக் கென்னினிச் சூழ்ச்சி மாதோ.      

91
   
 

என்னுறு மதியீ னத்தா ரிப்பெருந் திகிற்குள் ளாகிச்
சின்னபின் னங்க ளாகச் சிதைவலென் றழுங்கு கின்றேன்
முன்னுறக் காவா னாகி யிழுக்கியான் பிழையை முன்னிப்
பின்னர்நூ றிரங்கு மென்ற தெருளுரை பிழையாங் கொல்லோ.

92
   
 

இருண்டகா னெறிமுன் செல்லா தெதிரிடை யூறுக் கஞ்சி
வெருண்டுபின் னிடைவ னாகில் விடுங்கொலோ வேந்தன் கோபம்
தெருண்டமே லவர்தம் ஜீவன் சிதையினு மறந்தி றம்பி
மருண்டுவை யகத்து வாழ்வை மதிப்பரோ மதியற் றார்போல்.

93
   
 

சந்தேகி யச்ச னென்ற சழக்கர்போற் றிரும்பி யேகில்
வெந்தேநீ றாதல் வேண்டும் விண்ணின்று விழுவெந் தீயில்
முந்தேமற் றிதையுற் றாய்ந்து முடுகியிந் நெறியைப் பற்றி
வந்தேனிங் கிடையூ றஞ்சி மலங்குதன் மடமை யாமால்.    

94
   
 

மறமெலாங் குடிகொ ணாச தேசத்தை மருவில் ஞானத்
திறமெலா மழியுஞ் சிந்தைச் செறிவெலா நெகிழ்ந்து தேயும்
அறமெலாஞ் சிதையுந் தீரா வனர்த்தமே விளையு மன்றிப்
புறமெலா நகைசெய் தேசும் பின்னிடல் புலமைத் தன்றால்.

95