பக்கம் எண் :

207

 

போதமுற் றென்னின் மெய்விசு வாசம்
    பொருந்திநம் முட்கலந் திருக்கத்
தாதையே யுமது கிருபையீந் திடற்காய்த்
    தமியன்மன் றாடுகின் றேனே.           60

     (பொ - ரை) 'நாமிருவரும் வித்தியாசமில்லாமல்
ஒன்றாயிருப்பதைப் போல, இப்போது நான் உம்மிடம் பரிந்து பேசிவரும்
இவ்வடியார்களது வார்த்தையினால் இப்பூமியிலுள்ளோர் என்னை நீர்
இங்கனுப்பின புதுமையை களங்கமில்லாமலறிந்து ஞானமடைந்து என்னில்
மெய் விசுவாசம் பொருந்தி நம்மில் ஐக்கியப்பட்டிருக்க, பிதாவே! உமது
கிருபையை ஈந்தருளும்படி அடியேன் மன்றாடுகிறேன்.

 
 

அகிலலோ கங்க ளமைக்குமுன் னென்னி
    லன்புகூர்ந் தையநீ ரளித்த
மகிமையை நீரெற் குதவிய விவர்கண்
    மயக்கறக் கண்டுகண் களிப்புற்
றகமகிழ வெய்தற் கியானினி திருக்கு
    மத்தலத் தென்னோடு மமர்ந்து
தகவுட னிருக்க வேண்டுமிவ் வருத்தி
    தரித்திருக் கின்றதென் னுளத்தே.        61

     (பொ - ரை) 'எல்லா உலகங்களையும் நீர் படைக்குமுன் அப்பனே,
நீர் என்னிலன்புகூர்ந்து எனக்களித்த மகிமையை நீர் எனக்குத் தந்த
இவர்கள் சந்தேகப்படாமல் களிப்புடன் கண்டு ஆனந்தமடைய, நான்
சுகமாக இருக்குமிடத்திலேயே இவர்களும் என்னுடன் சேர்ந்து
உரிமையுடனிருக்கவேண்டும் எனும் ஆசை என் மனதிலிருக்கிறது.'

 
 

வையக மறியா தும்மையா னறிவன்
    மற்றிவர் தாமுமீங் கென்னை
ஐயநீர் வரவிட் டதையுநன் கறிந்தா
    ராதலி னரியவும் மன்பு
மெய்யுற வென்னில் விளங்குதல் போல
    விவருளும் விளங்குக வென்று
தெய்வமாக் குமரன் வெளிப்படை யாக
    ஜெபித்தனர் சிந்தனை யுருகி.          62

     (பொ - ரை) 'அய்யனே, உலகம் உம்மையறியவில்லை. நான்
உம்மை அறிந்திருக்கிறேன். நீர் என்னை யனுப்பினதை இவர்களும்
நன்றாய் அறிந்திருக்கிறார்கள். ஆகையால் விசேஷித்த உமது அன்பு
உண்மையாகவே என்னில் விளங்குவதுபோல இவர்களிடத்தும்
விளங்கவேண்டும்' என்று தேவனின் சிறந்த குமாரனான நம்பெருமான்
மனதுருக்கத்துடன் பகிரங்கமாகப் பிரார்த்தித்தார்.