பக்கம் எண் :

25

3. குருதரிசனப் படலம்
 

 
   

வித்தக வாத்தும விசாரி யிவ்வணம்
தத்துற லடைந்துயிர் தன்னை நாடியிங்
கெய்த்திடு முடலென வினைந்து சில்பகல்
மத்தரிற் கழித்தன னாண்டொர் வைகல்வாய். 1

     (பொழிப்புரை) ஞானமுள்ள ஆத்துமவிசாரியானவன்
இவ்வண்ணமாகச் சஞ்சலமடைந்து நித்திய ஜீவனை நாடி இங்கே
களைப்புற்றசரீரம் என்று சொல்லும்வண்ணம் சிலநாள்
பயித்தியகாரனைப்போல் கழித்தான். அவ்விடம் ஒரு நாளில்,

 
   

தண்ணளி தயங்கிய முகத்துத் தாமரைக்
கண்ணிணை மல்கிய கருணை காட்டிட
உண்ணிறை யன்புமிக் கொழுகிற் றென்னவே
வண்ணவான் மொழிச்சுவை யமிர்து வார்ந்துக. 2

     (பொ - ரை) குளிர்ச்சிபொருந்திய கிருபை விளங்கின
முகத்தினிடத்தே தாமரை மலர்போல் அழகிய இரண்டு கண்களும்
நிறைந்த கருணையைக்காட்டிட, இருதயத்தில் நிறைந்த அன்பானது
பொங்கி வழிந்து ஒழுகிற்று என்னும்படி அழகிய மொழிச்சுவையாகிய
அமிர்தம் வடிந்து சொரிய,

 
   

எண்ணருந் துயர்க்கெலா மிறுதி காட்டுமெய்ப்
புண்ணிய முருக்கொடு பொலிந்தி லங்கிய
வண்ணமென் றுணர்வுளார் மனங்க ளிப்புற
நண்ணின நிருஞ்சுவி சேஷ நாமத்தன். 3

     (பொ - ரை) எண்ணுதற்கரிய துயரங்களுக்கெல்லாம் அழிவைச்
செய்யக்கூடிய மெய்ப்புண்ணியமே ஒருருவெடுத்து மிகவும் விளங்கிய
வடிவம் இதுவோவென்று உணர்வுள்ளவரெவரும் மனமகிழ, சுவிசேஷகன்
என்னும் பெரிய நாமத்தையுடையவன் அங்கு வந்து சேர்ந்தான்.

 
   

உருகிமெய் விசாரியை யுற்று நோக்கிநின்
தருகணைந் தியாரைநீ யவலிக் கின்றனை
பெருகுமித் துயருனக் குற்ற பெற்றியென்
திருகலில் சிந்தையாய் செப்பு கென்றனன். 4