பக்கம் எண் :

282

  செய்விரவிப் பயிர்வளர்க்குந் தெண்ணீர்போற் படைவீரர்
கைவிரவி யறம்வளர்த்துத் தற்காக்குங் கருணையொடு
மெய்விரவி மிளிர்ஞான வியன்படைகள் வேந்தனவாற்
பொய்விரவா வருள்வேத புங்கவவிங் குளவென்றாள்.

39
   
  என்றினைய பத்தியெனு மேதமறு தவக்கிழத்தி
மன்றிலங்கு வயப்படையின் வரன்முறையும் விவரணமும்
வென்றிபுனை தருமாண்பும் விரித்துரைப்ப வியப்பினொடு
நன்றுகேட் டினிதுவந்து வேதியன்மற் றிவைநவில்வான்.
40
   
  அன்னாயிப் பிரபஞ்சத் தாரணியத் தருள்வழியின்
முன்னாகத் துணிந்துசெல முழுதுமெனைத் தெருட்டினவால்
பொன்னாடு புரந்தருளும் பூபதிபுண் ணியத்தமைந்த
மின்னாரும் படைக்கலம்போல் விளங்குநின
                               தருண்மொழியே.
41
   
  அவ்வியமே முதலாய வகத்திருளை யறத்தொலைக்குஞ்
செவ்வியவிம் மணியரங்கிற் செறிந்திலங்கித் திகழ்கின்ற
திவ்வியசர் வாயுதமா வருக்கத்திற் சிறிதொன்றே
வெவ்வியதெம் முனைமுருக்கி விறல்வாகை
                                  புனைந்திடுமால்.
42
   
  கீர்த்திமலி யிளவரசன் கிறிஸ்துவின்போர்ச் சேவகர்கள்
ஆர்த்தியுடன் றரித்துலவு மாயுதங்க ளிவையென்னிற்
கூர்த்திகைகை விடுத்திறைஞ்சித் தொழும்புகூ டுவதல்லாற்
பார்த்திசையி னெதிர்நிற்கப் படுபகையு முளவாங்கொல்.
43
   
  இருண்மேவு பகைதெறவென் றினிதமைத்த விவ்வெல்லாம்
பொருண்மேவு படைக்கலங்க ளொவ்வொன்றும் புநருலகத்
தெருண்மேவு துணைபுரிந்து ஜீவரக்ஷை யளிப்பனவால்
அருண்மேவு பரலோகத் தரசன்சீர் வாழியவே.
44
   
  என்றின்ன பரிசுவியந் தெடுத்தியம்பும் வேதியற்கு
முன்றுன்னு மலைக்காட்சி முறைநாளை மொழிதுமெனாப்
பொன்றுன்னு மெழின்மாத ரவரவர்தம் முழைபோக
நன்றுன்னி விசுவாசி தன்னுறையு ணாடினனால்.
45
   
  வேதியனு மன்றிரவு விழி துயின்று விடிகாலை
மாதவப்பள் ளியைக்குறுகி வரன்முறையஞ் கலிபுரிய
மேதகுநற் றவத்தியரவ் விருந்தினனைக் கொடுசென்று
மீதுயர்ந்த வணிமாட மேனிலைமண் டபத்தணைந்தார்.
46