பக்கம் எண் :

334

  போயலப்பன் றனைக்கிட்டிப் புரையறுமெய்த் தேவபத்தி
மேயகிரி யாசாரம் விமலவருண் மெய்யுறுதி
ஆயவற்றி னுட்பம்விரித் தறிவுறுத்தொப் புரைகொண்டு
வாயளவோ கிரியைமனை வயினுளவோ வெனவகுப்பாய்.

46
   
  அருள்வசத்தா லொருகாலுள் ளுடைந்துணர்வுற் றகந்திரும்பித்
தெருளுவனன் னடைகூடி வழிக்கோடல் செவ்வியதாம்
இருள்வசத்தா லிணங்கானே லெம்பியொருங் கந்நிலையே
மருள்பிடித்த வவனுறவை வரைவதுவே மரபென்றான்.
47
   
  ஒக்குமிதே சூழ்ச்சியென வுவந்தலப்ப னருகணைந்து
பக்குவமா யுரைதொடங்கிப் பரனருண்மா னவருளத்தின்
சிக்கறுத்து நிலைத்தூன்றி ஜீவரக்ஷை விளைக்குமெனின்
அக்கிரியைத் திறமெவ்வா றறிகுதுநீ யுரைக்கென்றான்.
48
   
  சுத்தமனத் தவனுரைக்கத் துருமலிந்த கருமனத்தான்
இத்தகைய வினாவினுக்கோ ரிருவகையுத் தரமுளவாம்
அத்தகைமை சுருக்கியினி தறைகுவனல் லருட்பேற்றாற்
சித்தமொரு முகமாகச் செப்புவன செவிக்கோடி.
49
   
  மகத்துவதை விபகிருபை மக்களிரு தயத்தடங்கி
அகத்தியல்தீ வினைப்பகையோ டமர்மூட்டுந் திறத்தானும்
மகத்துவமெய்ச் சுவிசேக்ஷ மறைபொருளை வகுத்துரைக்க
அகத்தூட்டு மறிவானு மருட்கிரியை வெளிப்படுமால்.
50
   
  உத்தரமற் றிவற்றைவிரித் துரைக்கவிருப் புளையாயின்
வித்தரிப்ப லெனநிகழ்த்த விழைவானை யெதிர்நோக்கி
அத்தனரு டீவினைய யருவருப்பித் திருமென்றல்
ஒத்திருக்கும் போராட்ட முளவெனினு மொவ்வாதால்.
51
   
  திருவிளக்கு மிரக்ஷணியத் திறந்தெரித்துத் தீவினையை
அருவருப்பித் துளம்புதுக்கி யாத்துமத்தை யுயிர்ப்பிக்கும்
மருவிருக்கு நறும்பிரச மலர்மறைந்தும் புறம்போந்து
பரிமளிக்கு மதுபோலும் பரன்கிருபைச் செயல்காண்டி.
52
   
  சொந்தமதிச் சூழ்ச்சியினாற் சுயவறிவாற் புறம்பொதிந்து
பந்தவினை பகைப்பார்போற் பலர்பேசிப் பகட்டிடுமிவ்
விந்தையினைப் பனித்துறையில் விரிபகன்றை வெறுந்ததுணரென்
நந்தரங்கத் தருவருப்ப ரருட்கிரியைத் திறந்தெரிவார்.
53