பக்கம் எண் :

345

  இடைவி டாதுமெய் வேதிய ரிருவரு மிணங்கி
நடைவ ழிப்படூஉ நயந்துசின் னாளினி னலங்கூர்
அடவி நீத்துவந் தலகைதொக் கறங்குடி போய
புடவி நச்சுமா யாபுரிப் புரிசைகண் ணுற்றார்.

32
   
               ஞானாசிரியனைக் கண்ணுற்ற படலம் முற்றிற்று.
   
 
மாயாபுரிப் படலம்
 
   
  அரிய நூனெறி கடைப்பிடித் தாரணக் கிழவன்
பரிய கானகந் துருவிவந் திறுத்தமை பகர்ந்தாம்
விரியுந் தீவினைக் குறையுளாய் விளங்கிய மாயா
புரியின் பான்மையுங் கோன்மையும் வகுத்தினிப் புகல்வாம்.
1
   
  இஞ்சி தோன்றலு நிதானியென் றிசைபெறு மேந்தல்
அஞ்ச லித்துநின் றையநின் னனுபவத் தாய்ந்த
வஞ்ச மிக்கமா யாபுரி மரபுரைக் கென்னாச்
செஞ்சொ லாரண னன்றென வினையன தெரிப்பான்.
2
   
  தொன்று தொல்லறந் துதைந்தெழில் குலவிய தூய
மன்று தொக்கபல் வளனெலாங் கரவினால் வௌவிக்
கன்று வெஞ்சினத் தலகைதன் கவிகையைக் கவித்தான்
அன்று தொட்டுமா யாபுரி யாயதிவ் வகிலம்.
3
   
  தூய நன்மையுஞ் சுகிர்தமு மொருந்கறத் துடைத்து
மாயி ரும்புவி முழுவதுந் தனதென வளைத்த
பேய னேபகைத் தவித்தையாம் பிறங்கலை யடுக்கி
மீயு யர்ந்தவான் கடிமதி லிட்டனன் மேனாள்.
4
   
  மேனி வந்தெழு மௌட்டியப் புரிசையின் விரகால்
ஞான பானுவின் கதிரொடு நற்கலை மதிதோய்
தூன லந்திகழ் சுடரொளி யகத்துறச் சுலவா
தீன மாயபுன் சமயமின் மினிகளே யியங்கும்.
5
   
  மட்டி லாதுயர் கடிமதில் வானுற நிவந்து
முட்டு மென்றெழின் முத்திமா நகர்வெளி முகட்டிற்
கெட்டி நிற்குமற் றகழிவாய் திறந்திரு ணிரையந்
தொட்டு நிற்குமீ தன்றிவே றுளகொலோ சூழ்ச்சி.
6